சங்க இலக்கியம் - II அலகு - 2 முல்லைப் பாட்டு

                முல்லைப் பாட்டு

1. நல்லோர் விரிச்சி கேட்டல்

"நனந்தலை உலகம் 
     வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த 
     மாதாங்கு தடக் கை
நீர்செல, நிமிர்ந்த 
     மாஅல், போல,
பாடுஇமிழ் பனிக் கடல் 
     பருகி, வலன் ஏர்பு,
கோடுகொண்டு எழுந்த 
     கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த 
     சிறுபுன் மாலை," 

விளக்கம் :
      🍀முல்லைத் திணைக்கு உரிய முதற்பொருளாகிய கார்காலப் பெரும்பொழுதும், மாலைக்காலச் சிறுபொழுதும் முல்லைப்பாட்டின் தொடக்கமாக அமைந்துள்ளது.
      ☘️திருமால் அகன்ற உலகை வளைத்துக்கொண்டுள்ளான். 
       🍀சுழலும் திகிரிச் சக்கரத்தையும், சங்கையும் கைகளில் ஏந்திக் கொண்டுள்ளான். 
        ☘️(வள்ளல் மாபலி) வார்த்த நீரை வாங்கிக்கொண்டு நிமிர்ந்தான் (விசுவரூபம்). 
        ☘️அந்தத் தோற்றம் போல, கடல்நீரைப் பருகி எழுந்த மழைமேகம் பெருமழை பொழிந்தது (கார்காலம்). 
         ☘️ மழை பொழிந்த மாலை நேரம்.

"அருங்கடி மூதூர் 
      மருங்கில் போகி,
யாழ்இசை இனவண்டு 
      ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, 
      நறுவீ முல்லை
அரும்புஅவிழ் அலரி 
      தூஉய், கைதொழுது,
பெருமுது பெண்டிர், 
      விரிச்சி நிற்ப" 

       ☘️கட்டுக்காவல் மிக்க பழமையான ஊர். 
       ☘️அந்த ஊருக்கு வெளிப்புறம் பெருமுது பெண்டிர் (35 அகவை தாண்டிய மகளிர்) சென்றனர். 
        ☘️நாழியில் கொண்டு சென்ற நெல்லையும், வண்டுகள் மொய்க்க மலரும் புத்தம்புது முல்லைப் பூவையும் தூவினர். 
        ☘️விரிச்சிக்காகக் காத்திருந்தனர். (விரிச்சி என்பது பிறர் வாயிலிருந்து விரியும் பேச்சுக் குரல்)

2. தலைவியைத் தேற்றுதல்

"சிறுதாம்பு தொடுத்த 
     பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் 
     நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த 
    கையள், கைய
கொடுங்கோற் கோவலர் 
    பின்நின்று உய்த்தர,
இன்னே வருகுவர், 
    தாயர் என்போள்
நன்னர்நல் மொழி 
    கேட்டனம்; அதனால்," 

விளக்கம் :
        ☘️ஆய்மகள் பச்சைக் கன்றுக்குட்டியைச் சிறிய தாம்புக் கயிற்றிலே தொடுத்து வைத்திருந்தாள். 
        ☘️அது தாய்ப்பசுவை எண்ணித் தவித்துக்கொண்டிருந்தது. 
        ☘️அந்தக் கன்றின் கழுத்தை அந்த ஆய்மகள் தன் கக்கத்திலே அணைத்துக்கொண்டு அதனைத் தேற்றும் சொற்களைப் பேசினாள்.
         ☘️“கையில் வளைகோல் வைத்திருக்கும் கோவலர் பின்னிருந்து ஓட்டிக்கொண்டு வர உன் தாயர் (தாய்ப்பசு) இன்னே (இப்பொழுதே) வந்துவிடுவர்” என்றாள். 
           ☘️[இந்த நல்ல சொற்கள் விரிச்சி கேட்டுக்கொண்டிருந்த பெண்களின் காதில் விழுந்தது. இதுவே அவர்கள் கேட்ட வரிச்சி]

"நல்ல, நல்லோர் 
    வாய்ப்புள்; தெவ்வர்
முனைகவர்ந்து கொண்ட 
    திறையர் வினைமுடித்து
வருதல், தலைவர், 
    வாய்வது; நீ நின்
பருவரல் எவ்வம்களை, 
   மாயோய்! என,
காட்டவும் காட்டவும் 
    காணாள், கலுழ்சிறந்து,
பூப்போல் உண்கண் 
    புலம்பு முத்துஉறைப்ப" 

விளக்கம் :
        ☘️ “இது நல்லவர் வாயிலிருந்து வந்த ‘புள்’ சகுனம். 
        ☘️பகைவரைப் போர்முனையில் வென்ற தலைவர் தாம் மேற்கொண்ட வினை முடிந்து அவ்வர்கள் தந்த திறையுடன் வருவது உறுதி. 
         ☘️மாயோய்! (மாயோன் எனபதன் பெண்பாற் பெயர். முல்லைநிலப் பெயர். 
          ☘️பசுமையான மாந்தளிரின் மாமை நிறம் கொண்டவள்) உன் கவலையைப் போக்கிக்கொள்” என்று விருச்சியைக் கேட்கும்படி பெண்கள் தலைவனைப் பிரிந்திருந்த மாயோளுக்குக் காட்டினர். 
            ☘️அச் சொற்களைக் கேட்ட பின்னரும் மாயோளின் பூப்போன்ற கண்களிலிருந்து அவள் புலம்பும் முத்துக்ககள் உதிர்ர்ந்தன.

3. பாசறையின் இயல்பு

"கான்யாறு தழீஇய 
      அகல்நெடும் புறவில்,
சேண்நாறு பிடவமொடு 
      பைம்புதல் எருக்கி,
வேட்டுப்புழை அருப்பம் 
      மாட்டி, காட்ட
இடுமுள் புரிசை 
       ஏமுற வளைஇ,
படுநீர்ப் புணரியின் 
        பரந்த பாடி" 

விளக்கம் :
         ☘️ பகைப்புலம் சென்ற தலைவன் பாடிவீட்டில் இருந்தான். 
         ☘️ அது காட்டாறு பாயும் முல்லைநிலத்தில் இருந்தது.
         ☘️மணம் கமழும் பிடவம் பூச்செடிகள் அழிக்கப்பட்டு அந்தப் பாடிவீடு அமைக்கப்பட்டிருந்தது. 
         ☘️வேட்டையாடும் விலங்குகள் அதில் நுழையாவண்ணம் முள்வேலிச் சுற்றுமதில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்தது.
         ☘️காட்டாறு கடல்போல் அகன்றதாய் அதனைச் சுற்றிலும் ஓடும்படிச் செய்யப்பட்டிருந்தது.

4.யானைப் பாகரது செயல்

"உவலைக் கூரை 
     ஒழுகிய தெருவில்,
கவலை முற்றம் 
     காவல் நின்ற
தேம்படு கவுளசிறு 
     கண் யானை
ஓங்குநிலைக் கரும்பொடு, 
     கதிர்மிடைந்து யாத்த,
வயல்விளை, இன்குளகு 
      உண்ணாது, நுதல்துடைத்து,
அயில்நுனை மருப்பின்தம் 
      கையிடைக் கொண்டென,
கவைமுட் கருவியின்,   
      வடமொழி பயிற்றி,
கல்லா இளைஞர், 
       கவளம் கைப்ப"

விளக்கம் :
       ☘️பாடிவீட்டுத் தெருக்களில் உவலைக்கொடி படர்ந்த கூரைக் கூடாரங்கள் இருந்தன. 
       ☘️ தெருக்கள் பிரியும் முற்றத்தில் காவலுக்காக யானை நிறுத்தப்பட்டிருந்தது. 
       ☘️அந்த யானைக்குக் கரும்பையும் கதிர்ரோடு கூடிய நெல்லந்தாளையும் தழைகளையும் உணவாகத் தந்தனர். 
       ☘️அவற்றை அந்த யானை தன் கைகளால் வாங்கி உண்ணாமல் தன் நெற்றியைத் துடைத்துக்கொண்டது. 
       ☘️அதனை உண்ணும்படி, வடமொழிச் சொற்களைச் சொல்லி, கையில் கவைமுள் அங்குசம் வைத்திருந்த இளைஞர்கள் பயிற்றுவித்துக்கொண்டிருந்தனர்.

5.வீரர்கள் தங்கும் படைவீடுகள்

"கல்தோய்த்து உடுத்த 
      படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை 
      கடுப்ப, நல்போர்
ஓடா வல்வில் 
       தூணி நாற்றி
கூடம்குத்திக் கயிறு 
        வாங்கு இருக்கை
பூந்தலைக் குந்தம்குத்தி,
        கிடுகு நிரைத்து,
வாங்குவில் அரணம் 
         அரணம் ஆக," 

விளக்கம் :
          ☘️தலைவனுக்குப் பாதுகாப்பு அரணம் அமைக்கப்பட்டிருந்தது. 
         ☘️கல்லில் துவைத்துக் கட்டும் ஆடையை நோன்பிருக்கும் பார்ப்பான் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்பறாத் தூணியும் வைக்கப்பட்டிருந்தன. 
          ☘️வேல்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர்.

6.அரசனுக்கு அமைத்த பாசறை

"வேறுபல் பெரும்படை 
       நாப்பண், வேறுஓர்,
நெடுங்காழ்க் கண்டம் 
      கோலி, அகம்நேர்பு," 

விளக்கம் :
          ☘️ தலைவனுக்கன்று தனிப் பாடிவீடு இதுந்தது. 
          ☘️அது உயர்ந்த தூண் நிறுத்திய அகம். 
          ☘️பல்வேறு படைவீரர்கள் அதனைக் காவல் புரிந்தனர்.

7.மங்கையர் விளக்குகளை ஏந்துதல்

"குறுந்தொடி முன்கை, 
      கூந்தல்அம் சிறுபுறத்து,
இரவுபகல் செய்யும் 
      திண்பிடி ஒள்வாள்
விரிவுவரிக் கச்சின் 
     பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் 
     நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் 
      நந்துதொறும் மாட்ட," 

விளக்கம் :
        ☘️கச்சுடை அணிந்து, முதுகுப்புறம் கூந்தல் புரள, கையில் வளையலுடன் வாளேந்திய மங்கையர் சுரைக் குடுக்கையில் கொண்டு வந்த எண்ணெய்யை இரவினைப் பகலாக்கும் வகையில் எரியும் விளக்குகளில் ஊற்றி சுடர் மங்கும் போதெல்லாம் அதன் திரியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர்.

8.மெய்காப்பாளர் காவல்புரிதல்

"நெடுநா ஒள்மணி 
      நிழத்திய நடுநாள்,
அதிரல் பூத்தஆடு 
      கொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு 
     அசைவந்  தாங்கு,
துகில்முடித்துப் போர்த்த 
     தூங்கல் ஓங்குநடைப்
பெரு மூதாளர் 
     ஏமம் சூழ" 

விளக்கம் :
      ☘️நீண்ட நாக்கினை உடைய மணி இது நள்ளிரவு என ஒலித்துக் காட்டியது. 
       ☘️பூத்திருக்கும் அதிரல் கொடி சிதைக்கும் காற்றில் ஆடுவது போல, முடி போட்டுப் போர்த்தியிருக்கும் துணி அக்காற்றில் ஆடும்படி பெருமூதாளர் (மெய்க்காப்பாளர்) தலைவனுக்குப் பாதுகாவலாக நடந்துகொண்டிருந்தனர்.

9.நாழிகைக் கணக்கர் பொழுது அறிவித்தல்

"பொழுது அளந்துஅறியும், 
      பொய்யா மாக்கள்,
தொழுது காண்கையர், 
     தோன்ற வாழ்த்தி,
எறிநீர் வையகம் 
     வெலீஇய செல்வோய்! நின்
குறுநீர்க் கன்னல் 
     இனைத்து என்றுஇசைப்ப" 

விளக்கம் :
       ☘️பிழையின்றிக் காலத்தைக் கணித்தறியும் நாழிகைக் கணக்கர் கைகளால் தலைவனை வாழ்த்தித் தொழுதுகொண்டு “உலகம் வெல்ல வந்துள்ளவரே! 
      ☘️குறுநீர்க் கன்னல் இத்தனை நாழிகை காட்டுகிறது” என்று இசைப்பாட்டு ஒலியோடு தெரிவித்தனர்.

10.அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்

"மத்திகை வளைஇய, 
      மறிந்துவீங்கு செறிவுடை,
மெய்ப்பை புக்க 
     வெருவரும் தோற்றத்து,
வலிபுணர் யாக்கை, 
     வன்கண் யவனர்
புலித்தொடர் விட்ட 
     புனைமாண் நல்இல்," 

விளக்கம் :
           ☘️இடையில் கச்சமாகக் கட்டிய உடை, உடலில் மெய்ப்பைச் சட்டை, அச்சம் தரும் தோற்றம், வலிமை மிக்க உடம்பு, உறுதி கொண்ட நெஞ்சுரம் ஆகியவற்றைக் கொண்ட யவனர் பழகிய புலியை சங்கிலித் தொடரிலிருந்து விடுவித்து அரசன் படுக்கைக்குக் காவல் புரிந்தனர்.

" திருமணி விளக்கம்காட்டி, 
       திண் ஞாண்
எழினி வாங்கிய
       ஈர்அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், 
       உரையா நாவின்,
படம்புகு மிலேச்சர் 
       உழையர் ஆக," 

விளக்கம் :
      ☘️அரசனின் பள்ளியறை திரையால் இரண்டு அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. 
      ☘️ஒருபக்க அறையில் அரசன் படுத்திருந்தான். 
       ☘️மறுபக்க அறையில் ஊமை மிலேச்சர் மணிவிளக்கம் வைத்துக் கொண்டு மெய்க்காப்பாளராக விளங்கினர்.

11.அரசனது சிந்தனை

" எடுத்து எறி எஃகம் 
      பாய்தலின், புண் கூர்ந்து,
பிடிக் கணம் மறந்த 
      வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன 
       பரூஉக் கை துமிய,
தேம் பாய் கண்ணி 
       நல் வலம் திருத்தி,
சோறு வாய்த்து ஒழிந்தோர்
       உள்ளியும்; தோல் துமிபு
வைந் நுனைப் பகழி 
       மூழ்கலின்,  செவி சாய்த்து,
உண்ணாது உயங்கும் 
        மா சிந்தித்தும்;
ஒரு கை பள்ளி 
      ஒற்றி, ஒரு கை
முடியொடு கடகம் சேர்த்தி, 
      நெடிது நினைந்து
பகைவர்ச் சுட்டிய
       படை கொள் நோன் விரல்,
நகை தாழ் கண்ணி 
      நல் வலம் திருத்தி,
அரசு இருந்து பனிக்கும்
       முரசு முழங்கு பாசறை" 

விளக்கம் :
      ☘️ பள்ளிகொண்டிருக்கும் அரசனின் நினைவோட்டமும் காட்சியும் போரைப் பற்றிய நினைவு. 
       ☘️ அரசனுக்குத் தூக்கம் வரவில்லை. 
       ☘️வேல் பாய்ந்த புண் வலியால் தன் பெண்யானை பற்றிய நினைவு இல்லாமல் கிடக்கும் ஆண்யானை, வெட்டுப்பட்ட சில யானைக் கைகள் பாம்பு பதைப்பது போல் துடித்த காட்சி, 
       ☘️அரசனின் வெற்றியை வாழ்த்திக்  கொண்டே செஞ்சோற்றுக் கடன் கழித்து மாண்டவர்கள், 
        ☘️தோலிலே அம்பு பாய்ந்த வலியால் உணவு கொள்ளாமல் தள்ளாடிச் செவிகளைச் சாய்த்துக் கொண்டு கிடக்கும் குதிரை ஆகியவற்றைச் சிந்தித்துக் கொண்டு, ஒரு கை தன் தலைக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு கையின் விரல் நண்டுக் கொடுக்கு போல் 
         ☘️பகைவரைச் சுட்டிய வண்ணம் காட்டிக்கொண்டு அரசன் பள்ளியில் கிடந்தான்.
        ☘️அவன் சுட்டிக்காட்டிய அரசர்கள் அவனது வெற்றியைப் பாராட்டிக் கொண்டு நடுங்கிய வண்ணம் நின்றனர்.

12. தலைவனது பிரிவினால் தலைவி பெற்ற துயரம்

"இன் துயில் வதியுநன் 
     காணாள். துயர் உழந்து, 
நெஞ்சு ஆற்றுப்படுத்த 
     நிறை தபு புலம்பொடு,
நீடு நினைந்து, தேற்றியும், 
     ஓடு வளை திருத்தியும்,
மையல் கொண்டும், 
     ஒய்யென உயிர்த்தும்,
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி, 
     இழை நெகிழ்ந்து,
பாவை விளக்கில் 
     பரூஉச் சுடர் அழல, 
இடம் சிறந்து உயரிய
     எழு நிலை மாடத்து,
முடங்கு இறைச் சொரிதரும்
     மாத் திரள் அருவி
இன் பல் இமிழ் இசை 
     ஓர்ப்பனள் கிடந்தோள்"

விளக்கம் :
       ☘️பாசறையில் இருக்கும் தலைவன் பிரிவால் தலைவிக்கு உறக்கம் வரவில்லை. 
       ☘️கவலை மேலிடுகிறது. 
      ☘️நெஞ்சை அவனிடம் செலுத்திப் புலம்பும் நீண்ட நினைவோடு தன்னைத் தானே தெற்றிக் கொள்கிறாள். 
      ☘️கழன்றோடும் வளையல்      களைத் திருத்திக்  கொள்கிறாள்.  என்றாலும் ஆசை விடவில்லை. 
    ☘️‘ஒய்’ எனப் பெருமூச்சு விடுகிறாள். 
     ☘️அம்பு பாய்ந்த மயில் போல நடுங்குகிறாள். 
     ☘️அணிகலன்கள் கழன்று விழுகின்றன. 
    ☘️அருகில் பாவை-விளக்கு ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
     ☘️இவள் இருக்கும் எழுநிலை மாடத்தின் (ஏழடுக்கு மாளிகையின்) வளைந்த பகுதி ஒன்றில் அருவி கொட்டும் ஓசையைக் கேட்டு நினைவை மாற்ற முயன்று கொண்டிருக்கிறாள்.

13. அரசன் வெற்றியுடன் மீண்டு வருதல்

"வேண்டு புலம் கவர்ந்த,
       ஈண்டு பெருந் தானையொடு, 
விசயம், வெல் கொடி உயரி, 
      வலன் ஏர்பு,
வயிரும் வளையும் 
      ஆர்ப்ப, அயிர"   

விளக்கம் :
             ☘️அருவி ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்த தலைவியின் காதுகள் நிறையும்படி அரசனின் வெற்றி முழக்க ஒலி கேட்கிறது. 
             ☘️பகைவரின் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு, அவர்களின் படையையும் தன் படையுடன் செர்த்துக் கொண்டு, வெற்றிக் கொடியை உயர்த்தியவண்ணம் மீள்வோர் சங்கும், கொம்பும் முழங்கும் ஒலி கேட்கிறது.

14. மழையினால் செழித்த முல்லை நிலம் காணுதல்

"செறி இலைக் காயா 
      அஞ்சனம் மலர,
முறி இணர்க் கொன்றை 
      நன் பொன் கால,
கோடல் குவி முகை 
      அங்கை அவிழ, 
தோடு ஆர் தோன்றி 
     குருதி பூப்ப,
கானம் நந்திய செந் 
     நிலப் பெரு வழி,
வானம் வாய்த்த 
     வாங்கு கதிர் வரகின்,
திரி மருப்பு இரலையொடு 
     மட மான் உகள,
எதிர் செல் வெண் மழை 
    பொழியும் திங்களில், "

விளக்கம் :
       ☘️காயா அஞ்ச நிறத்தில் (கருநீலம்) பூத்தது. 
       ☘️கொன்றை பொன் நிறத்தில் பூத்தது. 
       ☘️கோடல் பூ கைவிரல்கள் போல் விரிந்து பூத்தது. 
      ☘️தோன்றிப் பூ குருதி நிறத்தில் சிவப்பாகப் பூத்தது. 
      ☘️இப்படிப் பூத்திலுக்கும் முல்லை நிலத்தின் வரகுக் கொல்லையில் மான்கள் துள்ளி விளையாடின.

15. அரசனது தேரின் வருகை

"முதிர் காய் வள்ளிஅம் 
      காடு பிறக்கு ஒழிய,
துனை பரி 
     துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந் தேர் 
    பூண்ட மாவே."   

விளக்கம் :
         ☘️வள்ளிக் கிழங்கு முதிர்திருக்கும் முல்லைக் காட்டில் அரசனின் தேர்க் குதிரைகளை தேரோட்டி விரைவாகச் செலுத்துக் கொண்டிருந்தான்.

   💐  முல்லைப் பாட்டு முற்றிற்று💐





Popular posts from this blog

சங்க இலக்கியம் - II அலகு - 5 பட்டினப்பாலை

சங்க இலக்கியம் - II அலகு - 4 சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியம் - I அலகு - 5 புறநானூறு ( 10 பாடல்கள் )