சங்க இலக்கியம் - I அலகு - 5 பதிற்றுப்பத்து ( 5 ஆம் பத்து )


                       பதிற்றுப்பத்து 
                       ஐந்தாம் பத்து

நூல் குறிப்பு :
பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டு ள்ளது. 
இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையன வாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். 

இரண்டாம் பத்து 
இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர்கண்ணனார் பாடியது
இமையத்தில் வில் பொறித்தான். 
ஆரியரை அடக்கினான். யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான் பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான். 
மூன்றாம் பத்து
பல்யானைச் செல்கெழு குட்டுவனை பாலைக்கோதமனார் பாடியது. 
உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமை யாக்கிக் கொண்டான். அயிரை தெய்வத்துக்கு விழாஎடுத்தான் நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்
நான்காம் பத்து 
களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது
பூழி நாட்டை வென்றான். நன்னனை வென்றான்
ஐந்தாம் பத்து 
கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது. ஆரியரை அடக்கினான்
கண்ணகி கோட்டம் அமைத்தான்
கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான். வியலூரை அழித்து வெற்றி கண்டான். கொடுகூரை எறிந்தான். 
மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான். கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான். சோழர் ஒன்பதின்மரை வென்றான். படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான். 
ஆறாம் பத்து 
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காககை பாடினியார் நச்செள்ளையார் பாடியது
தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான். கைக்குழந்தை யைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.
ஏழாம் பத்து 
கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)
செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது. பல போர்களில் வென்றான்
வேள்வி செய்தான். மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான். அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான். பஅந்த மாய வண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்
எட்டாம் பத்து
பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது. கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
தகடூர்க் கோட்டையை அழித்தான்
ஒன்பதாம் பத்து 
இளஞ்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது
கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான்.பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான். வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான். சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாறுபாடும் இருக்க வாய்ப்பில்லை. இந்நூற்பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்பு களையும் படை வன்மை, போர்த்திறம், குடியோம்பல் முறை, பகையரசர் பால் பரிவு, கவிஞரை காக்கும் பண்பு பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சி மற்றும் பல்வகை திறன்களையும் சித்தரிக்கின்றன.

பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவரும் அந்த 8 பேர்.

இப்பத்தின் பதிகம் தரும் செய்திகளை முதலில் காண்போம்.

· கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன்
· ஆரியரை வணக்கினான்
· கண்ணகி கோட்டம் அமைத்தான்
· கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
· வியலூரை அழித்து வெற்றி கண்டான்
· கொடுகூரை எறிந்தான்
· மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
· கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
· சோழர் ஒன்பதின்மரை வென்றான்
· படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்


கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கரணமமைந்த காசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு.
பாடிப் பெற்ற பரிசில்: உம்பற்காட்டு வாரியையும் தன்மகன் குட்டுவன் சேரலையுங் கொடுத்தான்அக்கோ.
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான்.

பாடல் - 1
சுடர்வீ வேங்கை:

புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய
வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்ப
பண் அமை முழவும் பதலையும் பிறவும்
கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கி
காவில் தகைத்த துறை கூடு கலப்பையர்
கைவல் இளையர் கடவுள் பழிச்ச
மற புலி குழூஉ குரல் செத்து வய களிறு
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை
பூ உடை பெரும் சினை வாங்கி பிளந்து தன்
மா இரும் சென்னி அணிபெற மிலைச்சி
சேஎர் உற்ற செல் படை மறவர்
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு
வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும்
மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம்
ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர்
வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே
தாவல் உய்யுமோ மற்றே தாவாது
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர்
முரசு உடை பெரும் சமத்து அரசு பட கடந்து
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின்
எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண்
வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து
கால் உளை கடும் பிசிர் உடைய வால் உளை
கடும் பரி புரவி ஊர்ந்த நின்
படும் திரை பனி கடல் உழந்த தாளே

விளக்கம் :
 முதற் பாடலில் சுடர்வீ வேங்கை என்பதற்கு ‘ஒளிச் சுடர்கள் ஏற்றியது போன்ற பூக்கள் கொண்ட வேங்கை மரம்’ என்பது பொருளாகும்.
''இசையை எழுப்புவதற்குரிய நரம்புகள் கட்டப் பெற்ற வளைந்த கோட்டை உடைய யாழை இளைய மகளிர் சுமந்து வருவர். பண்ணோடு பொருந்திய முழவு, ஒரு கண்ணை உடைய மாக்கிணை, மற்றும் ஆடல் துறைக்கு உரியதும், கணுவை இடைவிட்டு மூங்கிலால் அறுத்துச் செய்யப் பட்டதுமான பெருவங்கியம் (பிற இசைக் கருவிகள்) ஆகிய இவற்றை யெல்லாம் ஒரு சேரக்கட்டி மூட்டை யாக்குவர். அம்மூட்டையைத் தோளில் தொங்கும் காவடியில் ஒரு பக்கத்தில் கட்டி, அதை இளைஞர்கள் தூக்கிக் கொண்டு அச்சம் மிக்க காட்டு வழியில் என்னோடு நடந்து வருவர்.
நடைவருத்தம் மறப்பதற்காக அவர்கள் கடவுளை வாழ்த்திக் குரல் எழுப்புவர். அந்த ஓசை புலியின் உறுமல் போல் கேட்கும். அதைக் கேட்டு அங்குள்ள வலிமை மிக்க யானை, ஏற்றிய சுடர்கள் போல ஒளி வீசும் பூக்களை உடைய வேங்கை மரத்தை வீரம் மிக்க புலியின் தோற்றம் என்று தவறாகக் கருதிச் சினம் கொள்ளும்; வேங்கை மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துப் பிளக்கும்; அதனைத் தன் தலையிலே அணிந்து கொள்ளும். பகைவர் மீது போர் கருதிச் செல்லும் வீரர் கையில் தண்டாயுதத்தைத் தாங்கி ஆரவாரிப்பது போல அந்த யானை பேரோசை எழுப்பும். அந்த ஓசை சுரபுன்னை மரம் நிறைந்த காடு முழுவதும் கேட்கும்.
மழை இல்லாமையால் பசையற்றுக் காய்ந்த மூங்கில்கள் உள்ள வழிகள் பல. அவற்றைக் கடந்து திண்மை மிக்க தேர்களையும் நல்ல புகழையும் கொண்ட உன்னைக் காண வந்தேன்.
பகைவரை வெல்வதாக உன்னுடன் சேர்ந்து வஞ்சினம் (சபதம்) கூறியவர்கள் உன் படை வீரர்கள். அதைத் தவறாது முடித்த வாய்மை மிக்கவர்கள் அவர்கள். அவர்களோடு சென்று முரசு முழங்கும் போரில் பகை அரசர் வீழ்ந்து படுமாறு போர் செய்தாய். நட்புக் கொண்ட அரசர் ஆக்கம் பெறச் செய்தாய். பகைவருடைய தலைகளை உலக்கையால் மிளகை இடிப்பதைப் போல் நீ ஏந்திய தோமரத்தால் (மரத்தால் ஆன ஆயுதம்) இடித்து அழித்தாய். முழங்குகின்ற கடல் போல உன் முரசு குறுந்தடியால் அடிக்கப்பட்டு முழங்கும். தலையாட்டம் என்னும் அணியை அணிந்த வெள்ளைக் குதிரை மீது ஏறி வருபவன் நீ. கடலின் அலைகள் திவலைகளாக (துளிகளாக) உடைந்து போகுமாறு நடந்து சென்று போர் செய்து வருந்தின உன் கால்கள். அக்கால்கள் தாம் கொண்ட வருத்தத்தை நீங்குமா? சொல்வாயாக.
இசைக்கருவிகளை எல்லாம் இளைஞர் சுமந்துவர நான் காடு பல கடந்து உன்னைக் காண வந்தேன். அதற்கே என் கால்கள் வருந்தினவே! கடலில் சலியாது போர் செய்த உன் கால்கள் மிக வருந்தியிருக்குமே'' என்று பாணன் ஒருவன் கேட்பது போல் புலவர் இப்பாடலைப் பாடியுள்ளார்.
மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றுஇரண்டு அலபல கழிந்து
(கழை = மூங்கில்; திரங்கு = காய்ந்து வற்றிய; அத்தம் = வழி)
பாணன் கடந்து வந்த பாலை வழிகள் பல. அவற்றின் கொடுமையை ஒரே வரியில் அழகாகக் கூறுவது எண்ணத்தக்கது.

பாடல் - 2
தசும்பு துளங்கிருக்கை :
இரும் பனம் புடையல் ஈகை வான் கழல்
மீன் தேர் கொட்பின் பனி கயம் மூழ்கி
சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்
அம்பு சேர் உடம்பினர் சேர்ந்தோர் அல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி
அன்னோர் பெரும நன்_நுதல் கணவ
அண்ணல் யானை அடு போர் குட்டுவ
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ
இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல்
உளை அவிர் கலி_மா பொழிந்தவை எண்ணின்
மன்பதை மருள அரசு பட கடந்து
முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர்
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து
வெண் தலை குரூஉ பிசிர் உடைய
தண் பல வரூஉம் புணரியின் பலவே

விளக்கம் - 2
தசும்பு துளங்கிருக்கை என்றால் 
கள்குடங்கள் வைக்கப்பெற்ற அசைகின்ற இருக்கை என்பது பொருள்.
கள் நிரம்பிய மிகப் பெரிய குடங்கள் உருண்டு விடாதபடி அவற்றை ஓர் இருக்கையில் வைப்பார்கள். வீரர்கள் மீண்டும் மீண்டும் குடங்களிலிருந்து முகந்து கள்ளை உண்பார்கள். அதனால் கள் உண்டவர்கள் மயக்கத்தால் ஆடுவது போலவே கள் கொண்ட குடங்களும் ஆடும். இந்த இருக்கை கள் குடத்தின் ஆடல் மேடை போல் தோன்றும். அதுவும் சேர்ந்து ஆடும். வெற்றிக் களிப்பில் வீரர் அனைவரும் கூத்தாடும் போது, குடமும் இருக்கையும் ஆகிய உயிர் இல்லாத அஃறிணைப் பொருள்கள் கூட மகிழ்ந்து ஆடும் என்னும் அழகிய நயம் தோன்ற இத்தொடர் அமைந்துள்ளது. அழகிய கற்பனையைக் கொண்ட இத்தொடர் பாடலில் உள்ளதால் அதுவே, பாடலின் பெயர் ஆகச் சூட்டப்பட்டுள்ளது.
இப்பாடலில் செங்குட்டுவனின் படை வீரத்தையும், கொடைத் திறத்தையும் பரணர் புகழ்கிறார்.
மாஇருந் தெள்கடல் மலிதிரைப் பெளவத்து
வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத்
தண்பல வரூஉம் புணரியின் பலவே.
கடலின் பெரிய நீர்ப்பரப்பில், நுரையாகிய வெள்ளைத் தலைகளைக் கொண்ட நீர்த்துளிகள் உடைந்து சிதறும்படி, மேலும் மேலும் வந்து மோதும் கடல் அலைகளை விட எண்ணிக்கையில் அதிகமான குதிரைகளை அல்லவா நீ இரவலர்க்கு வழங்கியுள்ளாய்!''
எண்ணிக்கை மிகுதிக்கு, கடலின் அலைகளை உவமை காட்டுவது சிறப்பு. பிடரி மயிர் சிலிர்த்துக் குதித்து ஓடிவரும் குதிரைகளுக்கு நுரைபொங்கக் குதித்து வரும் கடல் அலைகளை உவமையாகும்படி, குறிப்பாகப் பாடி இருப்பதும் சிறந்த கற்பனை அறிந்து மகிழத்தக்கது.

பாடல் - 3
ஏறாவேணி
கவரி முச்சி கார் விரி கூந்தல்
ஊசல் மேவல் சே இழை மகளிர்
உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின்
பெரும் கை மத_மா புகுதரின் அவற்றுள்
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ
இரும் பணை திரங்க பெரும் பெயல் ஒளிப்ப
குன்று வறம் கூர சுடர் சினம் திகழ
அருவி அற்ற பெரு வறல் காலையும்
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து
கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய
வரைவு இல் அதிர் சிலை முழங்கி பெயல் சிறந்து
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு
உறுவர் ஆர ஓம்பாது உண்டு
நகைவர் ஆர நன் கலம் சிதறி
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல்
பாடு விறலியர் பல் பிடி பெறுக
துய் வீ வாகை நுண் கொடி உழிஞை
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின்
கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக
மன்றம் படர்ந்து மறுகு சிறை புக்கு
கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே என்றும்
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின்
தொலையா கற்ப நின் நிலை கண்டிகுமே
நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது
நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்
உண்டு என தவாஅ கள்ளின்
வண் கை வேந்தே நின் கலி மகிழானே
    

விளக்கம் :
கோக்காலி என்பது பொதுவாக ஏறுவதற்குப் பயன்படும் பெரிய உயர்ந்த நாற்காலி போன்ற ஏணி ஆகும். ஆனால் இந்தக் கோக்காலி ஏறுவதற்குப் பயன்படாமல் கள்குடம் வைக்கும் இருக்கையாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏறா ஏணி என்று நயமாகக் குறிப்பிடப்படுகிறது. அதுவே பாடலின் பெயராக அமைந்தது.
வள்ளல் தன்மை மிகுந்த கையை உடையவனே! தூங்கலோசை உடைய பாட்டிற்குப் பொருந்த முழவு இசை முழங்குகிறது. உண்ணுதற்குரிய இறைச்சியைச் சுடும் புகை நாற்றமும், வெப்பமும் நீங்காமல் உள்ளன. நிரம்புதலும் குறைதலும் அறியாத கள் குடங்கள் கோக்காலியில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் கள் நிரம்பி நெடுநேரம் இருப்பதில்லை. வீரர்கள் முகந்து பருகிக் கொண்டே இருக்கின்றனர். அவை மீண்டும் நிரப்பப்படுவதால் குறைந்தும் நெடுநேரம் இருப்பதில்லை. ஏறாத ஏணியில் கள்ளின் மட்டம் மட்டும் எப்படித்தான் ஏறுகின்றதோ? இவ்வாறு விளங்கும் உன் செல்வப் பெருமையெல்லாம் கண்டேன். மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டேன்.''
இவ்வாறு குட்டுவனை வாழ்த்துகிறார் பரணர்.

பாடல் -. 4
நோய்தபுநோன்றொடை
நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற
அரிய என்னாது ஓம்பாது வீசி
கலம் செல சுரத்தல் அல்லது கனவினும்
களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர்
காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை
முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து
புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு
அரண்கள் தாவு_உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன
மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சி களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி
வைத்தலை மறந்த துய் தலை கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டி
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய காடே

விளக்கம் :
இதன் பொருள் நோயில்லாத ஆற்றல் மிக்க உடம்பு என்பதாம். சேரனின் உடல் வலிமை, அழகு, நலம் இவற்றை மிகச் சிறிய தொடரால் வாழ்த்தியமையால் இப்பாட்டு இப்பெயர் பெற்றது.
வைத்தலை மறந்த துய்த்தலைக் கூகை
கவலை கவற்றும் குராலம் பறந்தலை
முர(சு)டைத் தாயத்(து) அரசுபல ஓட்டித்  
துளங்குநீர் வியல்அகம் ஆண்(டு)இனிது கழிந்த
மன்னர் மறைத்த தாழி
வன்னி மன்றத்து விளங்கிய நாடே.
பசுமையானதும் கொழுப்பற்றதுமான இறைச்சித் துண்டை வைத்த இடத்தை மறந்து விட்ட உச்சிக் கொண்டையை உடைய கோட்டான், கவலையோடு பிற கோட்டான்களையும் வருத்தக் கூவும் இடுகாடு; அங்கு அரசர் பலரை வென்று இவ்வுலகை ஆண்ட மன்னர் பலர் தாழியிலே இடப்பட்டு வன்னி மரத்தின் நிழலை உடைய இடுகாட்டு மன்றத்திலே புதைக்கப்பட்டனர். நோயற்ற உன் உடம்பினை அந்தத் தாழியாகிய மட்குடம் காணாது நீங்குவதாக. அதாவது, என்றும் நீ இறவாது நீடு வாழ்வாயாக'' என்று பரணர் பாடியுள்ளார்.
அறுகை என்ற குறுநில மன்னனுக்காகச் செங்குட்டுவன் பழையன் மீது படையெடுத்து அவன் அரண்களை அழித்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு இப்பாட்டால் கூறப்பட்டது.
தபு என்றால் கொல்லும் என்று பொருள். நோய்தபு வன்மையான உடம்பு என்றால், நோயையே கொன்று வெற்றி கொள்ளும் வலிமை மிக்க உடம்பு என்றும் பொருள் தருகிறது. மேலும், போர்செய்து பகைவரை வென்று அடையும் பொருளைக் கொடையாக ஈந்து, பரிசிலர்களாகிய எங்களின் பசி முதலிய நோய்களை அழிக்கும் வலிமை மிக்க உடம்பு என்றும் நயப்பொருள் தருகின்றது. இந்த அருமை மிக்க அழகிய தொடரைக் கொண்டுள்ளதால் இப்பாட்டுக்கு அது பெயராகிறது.

பாடல் - 5
ஊன்துவை அடிசில்
பொலம் பூ தும்பை பொறி கிளர் தூணி
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின்
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின்
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின்
எழுமுடி மார்பின் எய்திய சேரல்
குண்டு கண் அகழிய மதில் பல கடந்து
பண்டும்_பண்டும் தாம் உள் அழித்து உண்ட
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து
கதவம் காக்கும் கணை எழு அன்ன
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்_வழி இறுத்து
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர்
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல்
அனைய பண்பின் தானை மன்னர்
இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை
மழை கொள குறையாது புனல் புக நிறையாது
விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல்
வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு
முழங்கு திரை பனி கடல் மறுத்திசினோரே

விளக்கம் :
ஊன் என்பது கறி, இது மாமிசம், இறைச்சி எனப்படும். ஊனோடு குழைத்துச் சமைத்த சோறு என்பது இத்தொடரின் பொருள் இப்பாட்டு சேரன் செங்குட்டுவனின் வீரச் சிறப்பைக் கூறுகின்றது

சோறு வேறு, ஊன் வேறு என்று பிரித்தறிய முடியாதவாறு இரண்டும் ஒன்றாய்க் குழைந்த சோறு ஊன் துவை அடிசில் ஆகும். அந்த உணவை உண்ணும் உன் வீரர்களுக்குத் 'தம் உடம்பில் உள்ள ஊன் வேறு; நீ தந்த சோறு வேறு’ என்று பிரித்துப் பார்க்காத அளவுக்குச் செஞ்சோற்றுக் கடன் என்னும் நன்றி உணர்வு உள்ளது. அதனால்தான் மிக்க வீரத்துடன் போர் செய்கின்றனர். வெற்றியைக் குவிக்கின்றனர். இந்தக் குறிப்புப் பொருளை உணர்த்தும்படி நயமாக அமைந்துள்ளது இந்தத் தொடர். இதனால்தான் இப்பாடலுக்குப் பெயராக அமைந்தது.

பகைவரின் குதிரைகள் முதலியன வருவதைத் தடுக்க முள் இட்டு வைத்தலை அறியாத எல்லைப் புறத்தையும், பகைவரின் அம்பு வேகத்தை அடக்கும் கேடயத்தையும் கொண்ட அரசர்களில் நீ ஒப்பு அற்றவன்.

கடல், மேகங்கள் வந்து முகந்து கொள்ளுதலால் குறைந்து போவதில்லை. ஆறுகள் வந்து சேர்வதால் நிரம்பி வழிவதும் இல்லை. காற்றால் அசைக்கப்பட்டு அலைகள் ஓயாமல் உள்ளது அக்கடல். அதன் மீது வேலைச் செலுத்தி, அக்கடலிடத்தே எதிர்த்த பகைவரை வெற்றி கொண்ட உன்னை ஒத்தவர் இனிப் பிறக்கப் போவதில்லை. உன் முன்னோரிலும் ஒருவரும் இல்லை.'' இவ்வாறு பரணர் சேரனைப் புகழ்கிறார்.

பாடல் - 6
கரைவாய்ப் பருதி
இழையர் குழையர் நறும் தண் மாலையர்
சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கை
திறல் விடு திரு மணி இலங்கு மார்பின்
வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர்
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி
பணியா மரபின் உழிஞை பாட
இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின்
சுரம் பல கடவும் கரை வாய் பருதி
ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமிய
பல் செரு கடந்த கொல் களிற்று யானை
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய
வெல் புகழ் குட்டுவன் கண்டோர்
செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே
    
விளக்கம் :
ஓரத்தில் குருதியின் சுவடு படிந்த தேர்ச் சக்கரம் என்பது பொருள். (பருதி = சக்கரம்; கரை = ஓரம், விளிம்பு)
'நல்ல அணிகலன்களையும் காதில் குழைகளையும் கழுத்தில் மாலையையும் உடைய பெண்கள், ஒளிமிக்க வளையலை அணிந்த முன்கையைக் கொண்டவர்கள்; மணிமாலை விளங்கும் மார்பினை உடையவர்கள்; வண்டு மொய்க்கும் கூந்தலை உடையவர்கள்; அக்கூந்தலைக் கொண்டையாக முடித்தவர்கள் அந்தப் பாடல் மகளிர், அவர்கள் நரம்பால் தொடுக்கப் பெற்ற யாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத குட்டுவனின் உழிஞைத் திணைச் செயலைப் புகழ்வர். அவர்களுக்குக் குட்டுவன் இனிய கொடை பல அளிப்பான். போர்க்களத்தில் காடுகள் போன்ற தடைவழிகள் பலவற்றின் வழியாகச் செலுத்தப்படும் தேரின் சக்கரத்தின் ஓரத்தில் குருதிக் கறை படியப் பல வீரர்களின் தலைகள் அச்சக்கரத்தில் அகப்பட்டு நலியும். அத்தகைய போர்கள் பலவற்றை வென்ற, கொல்லும் இயல்புடைய யானைகளையுடைய வேந்தன் குட்டுவன். தன் வேற்படையால் கடலை இடமாகக் கொண்டு போர் செய்தோரையும் தோற்றோடச் செய்தான். பெருமை மிக்க அச்செங்குட்டுவனின் புகழைப் பாடிப் பரிசு பெற்றோர் தம் ஊர்க்கு மீண்டு செல்லக் கருத மாட்டார்.

இவ்வாறு சேரன் பரிசில் பெற வரும் கலைஞர்களுக்கு அன்புடன் முகம் மலர்ந்து கொடை வழங்கும் பண்பைப் பரணர் பாராட்டுகிறார். அதே நேரத்தில் தன் பகைவர்களுக்கு எந்த அளவு கடுமை பொருந்தியவன் என்பதை, அவனது தேர்ச்சக்கரத்தை வைத்தே குறிப்பாக உணர்த்துகிறார். இனிய முகம் கொண்ட இவனது தேரின் சக்கரம் இரத்தக் கறை படிந்த வாயாகக் காட்டப்படுகிறது. இந்தச் சிறப்பினால் கரைவாய்ப் பருதி என்னும் தொடர் பாடலின் பெயராக ஆயிற்று.

பாடல் - 7
நன்னுதல் விறலியர்
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்
பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழல
நன் நுதல் விறலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே

விளக்கம் :
நல்ல நெற்றியை உடைய ஆடுமகளிர் என்பது இதன் பொருள். நன்னுதல் என்னும் சொல் குறிப்பாகக் கற்பில் சிறந்தவள் என்பதை உணர்த்தும் மரபுச் சொல்.

சேரன் பகைவரை அழித்து வேர் அறுக்கும் செயலில் ஓய்வதில்லை. ஒவ்வொரு முறை அவன் போரிடும் போதும், யானைகளைப் பரிசிலாகப் பெறுவதில் கலைஞர்கள் ஓய்வதில்லை. மலை மேலிருந்து வீழும் அருவி போல மாடங்களின் உச்சியில் இருந்து காற்றால் அலைக்கப் படும் கொடிகள் தெருவில் அசையும். அத்தெருக்களில் எரியும் விளக்குகளில் நெய்யை ஊற்றுவர். அந்நெய் விளக்கின் உட்பகுதியிலிருந்து நிரம்பி வழிவதால் விளக்கின் பருத்த திரி பெரிதாக எரியும். அவ்வொளியில் நல்ல நெற்றியையுடைய விறலியர் ஆடுவர். அத்தகைய ஊர்களில் எல்லாம் குட்டுவனைப் பற்றிய புகழுரைகள் ஓய்தல் இல்லை'' என்று சேரனைப் புகழும் இப்பாடலில், ஆடும் தொழிலையுடைய மகளிரும் குலமகளிர்போல் கற்பிற் சிறந்து விளங்கினர் என்று அவன் நல்ல ஆட்சித் திறன் பாராட்டப்படுகிறது. இதனால் நன்னுதல் விறலியர் என்னும் தொடரால் இப்பாடல் பெயர் பெற்றது.


பாடல் - 8
பேர்எழில் வாழ்க்கை   
பைம் பொன் தாமரை பாணர் சூட்டி
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்கு
கடலொடு உழந்த பனி துறை பரதவ
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர்
கொள்ளா பாடற்கு எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன் என தத்தம்
கைவல் இளையர் நேர் கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும்
இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர்
பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ
நின் மலை பிறந்து நின் கடல் மண்டும்
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின்
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை
மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும்
தீம் புனல் ஆயம் ஆடும்
காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே

விளக்கம் :
பெருமையும் அழகும் உடைய வாழ்க்கை என்பது இதன் பொருள்.
உன் நாட்டில் உள்ள மலையிலே தோன்றி, உன் நாட்டில் உள்ள கடலிலே கலக்கும் நீர் நிறைந்த ஆற்றில் கொண்டாடப்படும் புனலாட்டு விழாவும், சோலையில் கொண்டாடப்படும் வேனில் விழாவும் உடையது, பெருமையும் அழகுமுடையது, உன் வாழ்க்கை. உன்னுடைய சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு செல்வ மக்கள் கூடி விளையாடும் காஞ்சி என்னும் ஆற்றின் துறையில் பரந்த நுண்ணிய மணலை விட எண்ணிக்கையில் மிகுந்த, பல்லாண்டுகள் நீ வாழ்வாயாக!'
ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துவது சங்க காலக் கவிதை மரபு. வேனிற்காலத்தில் அரண்மனையில் வாழாமல், இனிய சோலையில் பகைவர் பற்றிய அச்சம் இன்றித் திரியும் குடிமக்களுடன் வாழும் அழகிய வாழ்க்கை பேரெழில் வாழ்க்கை எனப்பட்டது. இதுவே பாடலின் பெயர் ஆகியது.


பாடல் - 9
செங்கை மறவர்

யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின்
துயலும் கோதை துளங்கு இயல் விறலியர்
கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇய
களிறு பரந்து இயல கடு மா தாங்க
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார்
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி
நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர்
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக
படு பிணம் பிறங்க பாழ் பல செய்து
படு கண் முரசம் நடுவண் சிலைப்ப
வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் பட
கரும் சினை விறல் வேம்பு அறுத்த
பெரும் சின குட்டுவன் கண்டனம் வரற்கே
விளக்கம் :
சிவந்த கையினையுடைய மறவர் என்பது இதன் பொருள்.

சினமிக்க போர் செய்த குட்டுவனைக் கண்டு வருவதற்காக நாங்கள் போகிறோம். அசையும் கூந்தலையும் ஆடும் இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள். இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார் உடையும் உணவும் பெறுவர்''. என்று சேரன் கொடைச் சிறப்பைப் படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார் பரணர். அவன் நாடுகளை வெல்வதே விறலியர் பாணர் போன்றவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காகத்தான் என்கிறார்.

அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும் போதுதான் அதைச் செங்கை என்று பாராட்டுவது வழக்கம். இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர் என்கிறார் பரணர். ஆனால் அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப் பொன், பொருளை வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே சிவந்து - வள்ளலின் செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக் குறிப்பு மொழியால் சொல்கிறார்.

பாடல் - 10
வெருவரு புனல்தார்.
மா மலை முழக்கின் மான் கணம் பனிப்ப
கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி
கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ
செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர
விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு
அரணம் ஆகிய வெருவரு புனல் தார்
கல் மிசையவ்வும் கடலவும் பிறவும்
அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார்
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு
வண்ணம் நீவி வகை வனப்பு உற்ற
வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர்
விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து
கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து
பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ
எவன் பல கழியுமோ பெரும பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇ
பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது
கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும்
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே     
    

விளக்கம் :
அஞ்சத் தக்க காலாட் படையாகிய வெள்ளம் என்பது இதன் பொருள்.

''பெரிய மலையிடத்தே மேகம் முழக்கம் செய்வதால் மான் கூட்டம் அஞ்சும். காற்று அசைப்பதால் ஆலங்கட்டி சிதறக் கடுமழை பொழியும். கரும்பு வயல்களை உடைய நாடுகள் வளம் பெருகவும், வளம் பொருந்திய உலகைப் பாதுகாக்கவும் காவிரியாற்றின் வெள்ளம் நேர் கிழக்காக ஓடிவரும். அரசே! நீ அக்காவிரி போன்றவன் மட்டுமல்லன். பூக்கள் விரிந்த நீரைக் கொண்ட மூன்று ஆறுகள் சேரும் இடமான முக்கூடலையும் ஒத்தவன்.

கொல்லுகின்ற யானைகளாகிய பெரிய அலைகள் திரண்டு வர, வலிமை மிக்க விற்படை அம்புகளை நீர்த்துளிகளாகச் சிதறி வர, கேடயத்தின் மேலே மின்னும் வேல்கள் மீன்களாக விளங்க, போர்ப்பறையோடு முரசொலி கலந்து வெள்ளத்தின் ஓசையாய் முழங்க, அதனைக் கேட்டு அஞ்சிப் பணிகின்ற அரசர்களுக்குக் காவலாகவும், எதிர்த்தவரை அழிக்கும் பெரும் வெள்ளமாகவும் உன் காலாட்படை பாய்ந்து செல்லும். படையாகிய அந்த வெள்ளம் கடலிலும் மலையிலும் பிற இடத்திலும் உள்ள பகைவர் அரண்களை அழித்து, அவர் நாட்டின் நிலப்பரப்பு முழுவதிலும் பாய்ந்து பரவி நிரம்பிவிடும். பகைவரின் புகழ் கெடும். அவர்களின் சினம் என்னும் தீயை அவித்துவிடும். இக்காலாட் படைக்குத் தலைவனாகிய செங்குட்டுவனே! சாந்து பூசித் திலகமிட்டு, மைதீட்டிய பெண்களின் பல வண்ணங்களும் கலையும்படி அவர்களைக் கூடி அவர்களின் மென்மையான கூந்தலாகிய படுக்கையில் கிடந்து, அவர்களைத் தழுவிச் சிறுதுயில் பெறுவதை இழந்தாய். இவ்வாறு போர்க்களத்திலேயே நாள் பலவும் கழிந்தன. இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு கழியுமோ?''.

''வாழும் நாட்களின் பெரும் பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்து விடுகிறாயே? எங்களைக் காக்கும் கடமைக்கே நாட்களை ஒதுக்கிவிட்டதால், உனக்கு இன்பம் தரும் காதலுக்கு நேரம் இல்லாமல் போய்விட்டதே'' என்று கவலையோடு கேட்கிறார் பரணர்.

வீரன் குட்டுவனின் தன்னலம் அற்ற கொடை உள்ளம், தன் குடிமக்களுக்காகக் காதல் இன்பத்தைக் கூட இழக்கத் தயங்காதது என்று உணர்த்துகிறார். சேரனின் படையைப் பகைவர் நிலப்பரப்பை விழுங்கும் பெரு வெள்ளமாக உருவகம் செய்து பாடுகிறார். இதனால் வெருவரு புனல்தார் என்ற உருவகத் தொடர் பாடலின் பெயர் ஆகியது.

பரணர் சங்க காலப் புலவர்களில் புகழ் மிக்கவர். சங்க இலக்கியங்களில் இவர் எண்பத்தாறு பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் மிகுதியாக இடம் பெறும்.

இப்பாட்டின் தலைவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன். மேற்குக் கடலில் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடித்துத் தொல்லை செய்து வந்தனர் கடற்கொள்ளையர்கள். இவர்களைத் தன் கப்பல் படை கொண்டு அடக்கி வெற்றி பெற்றான். இதனால், இவன் கடல் பிறக்கோட்டிய என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். இப்பத்துப் பாடல்களில் பரணர் செங்குட்டுவனின் வீரம், கொடை ஆகிய இருபெரும் பண்புகளைப் போற்றுகிறார். அறிந்து மகிழ்வோம்..


Popular posts from this blog

சங்க இலக்கியம் - II அலகு - 5 பட்டினப்பாலை

சங்க இலக்கியம் - II அலகு - 4 சிறுபாணாற்றுப்படை

சங்க இலக்கியம் - I அலகு - 5 புறநானூறு ( 10 பாடல்கள் )