சங்க இலக்கியம் - I அலகு - 5 புறநானூறு ( 10 பாடல்கள் )
புறநானூறு
நூல் குறிப்பு
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.
புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன.
புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக் கின்றன.
இதனை ஜி. யு. போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
பாடியவர்கள்
இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை.
அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
நூல் அமைப்பு
இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும் போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள் ளனர்.
புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன
புறப்பொருள்
அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போல, புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.[1]
இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன.
இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.
புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.
புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்
அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.
சமூக நிலை
பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டை யேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும், 30 படைக்கலக்கருவி களையும், 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கு கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி என புறநானூறு விளங்குகிறது.
வரலாற்றுக் குறிப்புகள்
புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும், கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர் களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டையப் போர்க் களங்களான வெண்ணிப் பறந்தலை, வாகைப்பறந்தலை, கமுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேரெயில் போன்ற போர்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன
புறநானூறு - 31
வடநாட்டார் தூங்கார்!
பாடியவர் : கோவூர்கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை.
துறை : அரசவாகை, மழபுல வஞ்சி
சிறப்பு : வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக்கேட்டுஅஞ்சிய அச்சத்தால் துஞ்சாக் கண்ணர் ஆயினமை.
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க,
நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப்
பாசறை யல்லது நீயொல் லாயே;
நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே;
போர் எனில் புகலும் புனைகழல் மறவர்,
காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய;
செல்வேம் அல்லேம் என்னார்; கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்,
குண கடல் பின்ன தாகக், குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப,
வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
பொருளுரை:
👉உலகவாழ்க்கையில் மக்களால் நெறி யறிந்து எய்துதற்குரிய சிறப்புடைய முறை மையால் பொருளும் இன்பமும் அறத்தின் பின்னேவரும் காட்சிபோல சேர பாண்டியர் ஆகிய இருவரது குடையும் பின்வர மேலான புகழுடைய உனது வெண்கொற்றக்குடை.
👉நிறமும் அழகும் உடைய திங்களைப் போல் வெகுதொலைவில் உயர்ந்து விளங்க நல்ல தணியாத புகழை விருப்புடன் நினைந்து வெல்லும் போரினைச் செய்யும் பாசறையில் இருப்பதல்லாது உனது நகரின் அரண்மனையில் இருப்பதற்கு உடன்படமாட்டாய் நீ!
👉யானைக் கொம்பிலுள்ள முனைப்பூண் மழுங்கி, முகம்தேய மண்டியிட்டு பகைவரின் காவலை யுடைய கோட்டை மதிற் சுவரைக் குத்தும் உனது யானைகள் அடங்காது இருக்கின்றன.
👉போரென்று அறிந்து விரும்பி அணிந்த வீரக் கழலையுடைய உனது மறவர்களும்
காட்டின் நடுவில் அமைந் திருந்த பகைவர் நாடு மிகத் தொலைவில் இருப்பதால் நாங்கள் செல்ல மாட்டோம் எனச் சொல்ல மாட்டார்கள்.
👉பகைவர் நாட்டில் ஆரவாரத்துடன் வெற்றிவிழாக் கொண்டாடி அங்கேயே பகைப்புலத்தில் தங்கியும், கிழக்குக் கடற்கரையைப் பின்னால் விட்டு நீங்கியும், மேற்குக்கடல் பகுதியை அடைந்து அக்கட லின் வெண்ணிறத் தலை போன்ற அலை கள் உனது குதிரைகளின் குளம்புகளைத் தழுவ,
👉நீ வலமாக ஒவ்வொரு நாடாக வரலாமென எண்ணி மனம் அலைபாயக் கலக்கமுற்று நெஞ்சம் நடுங்கித் துன்பம் மேலிட வடநாட்டிலுள்ள அரசுகள் உறக்கத்தைத் துறந்த கண்களை உடையனவாயின.
புறநானூறு - 32.
பூவிலையும் மாடமதுரையும்!
பாடியவர் : கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.
சிறப்பு : சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.
கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
மாட மதுரையுந் தருகுவ னெல்லாம்
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே.
பொருளுரை:
இந்த பழமையான நிலத்திற்கு உரிமையுடையவன் யார் என்று நினைத்துப் பார்த்தால் நல்ல அறிவு நுட்பமுள்ள குயக்குலத்து இளையோர் மண்பாண் டங்கள் வனைவதற்கு தேர்க்காலை
ஒத்த சக்கரத்தில் வைத்த பச்சை மண்ணாகிய கனத்த உருண்டை போல, இந்த குளிர்ந்த மருத நிலத்தை யுடைய நாடு சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுடைத்தது.
ஆதலால், நம் சுற்றத்தாரின் இல்லங்களில், உணவு சமைக்கும் பாத்திரங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு
விலையாக நீளமான கொடிகளில் பூக்காத வஞ்சியாகிய வஞ்சி நாட்டையும் தருவான் என்ற ஒன்று மட்டுமா!
நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினைப் பூசிய வளைந்த சந்தினையுடைய (carrying angle) முன் கையினையும், மூங்கில் போன்ற தோளினையும், ஒளிபொருந்திய நெற்றி யினையுடைய விறலியர் பூவிற்கு விலை யாகப் பெறுக என்று மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்! ஆதலால், பரிசில் மக்களே! நாம் எல்லோரும் அவனைப் பாடுவோம், வாருங்கள்!
பூத்தவஞ்சி வஞ்சிக்கொடிக்கும், பூவாவஞ்சி வஞ்சிநகர்க்கும் ஆதலால், பூவாவஞ்சி என்றார் ஆசிரியர் கோவூர் கிழார்.
பூவாவஞ்சி என்பது கருவூர்க்கு வெளிப்படை. வஞ்சிநகர் வஞ்சிக்கள மென்றும், பின்பு அஞ்சைகளமென்றும் மாறிய காலத்தில் கருவூர் வஞ்சியென வழங்கலாயிற்று.
விறலியர் பூவிலை பெறுக என்றவிடத்து, பூவிலை மடந்தையராகிய கூத்தியரின் நீக்குதற்கு, பூவிலை என்பதைப் பூவிற்கு விலை எனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர், தலையில் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக ’மாட மதுரை தருகுவன்’ என்றார்.
இவ்விரு நகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட சேரநாட்டைச் சேர்ந்த வஞ்சி நகரமும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த மதுரை நகரமும் சோழன் நலங்கிள்ளியின் ஆதிக்கத்தில் இருந்தன எனத் தெரிகிறது.
புறநானூறு - 33.
புதுப்பூம் பள்ளி!
பாடியவர் : கோவூர்கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி.
திணை :வாகை.
துறை : அரசவாகை.
சிறப்பு : பகைவரது கோட்டை களைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவு களில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபுபற்றிய செய்தி.
கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை
வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்
காம விருவ ரல்லதி யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி
பொருளுரை:
வேந்தே! காட்டில் தங்கி வாழும் சினம் மிக்க வேட்டை நாய்களை உடைய வேடன் மான் தசைகள் வைக்கப்பட்ட ஓலையால் புனைந்த பெட்டியும், இடைச்சியர் குடம் நிறைய கொண்டு வந்த தயிரும் ஏரால் உழுதுண்டு வாழும் உழவர்களின் பெரிய இல்லங்களில் வாழும் மகளிர் பெற்றுக் கொண்டு, குளத்தின் கீழுள்ள வயல்களில் விளைந்து, வேறிடத்தே அமைத்த களத்தில் தொகுத்து, வைக்கோலும் பதரும் களைந்த தூய்மையான நெல்லை முகந்து எடுத்துக் கொடுப்பர்.
வேடரும் இடைச்சியரும் மகிழ்ச்சியுடன் அந்நெல்லைப் பெற்றுச் செல்கின்ற ஊர் தென் திசையில் பொதிகைமலை உள்ள பாண்டியனது நல்ல நாட்டில் உள்ளது.
அங்கு அமைந்த ஏழு அரண்களின் கதவுகளை அழித்துக் கைப்பற்றி பெரிய வாயை உடைய உனது புலியைப் பொறிக்கும் வலிமையை உடையவன் நீ!
உன்னைப்பாடும் புலவர்கள் நீ பகைவ ருடைய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றதைப் புகழ்ந்து பாட, உன் படைவீரர் கள் பூந்தாதுக்கள் பரவியுள்ள தெருக்களில் அமைந்த பாசறைகள் பொலிவு பெற,
உலராத பசுமையான இலைகளை இடை யிடையே வைத்துக் கட்டப்பட்ட மலராத முல்லை அரும்பு களாற் தொடுத்த மாலையின் பூப்பந்தைப் காண்பது போன்ற தசைகளோடு கூடிய பெருஞ்சோற்றுத் திரளையை பாணர்களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கிறார்கள்.
அத்தகைய சிறப்புடையது உனது கொடிய போர்முனைகளின் இருப்பிடம்.
கைவல்லுனர்களால் புனைந்து செய்தும் வரையப்படும் அழகு பொருந்திய அல்லிப் பாவை அல்லியம் என்னும் கூத்தை ஆடும் அழகைஒப்ப அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாக இருவராக அல்லாமல் நள்ளிரவில்தனியாக ஆண்மகன் ஒருவன் செல்வதில்லை.
அத்தகைய குளிர்ந்த மலர்களையுடைய பூஞ்சோலையின் செல்வதற்கு இனிய செறிந்த மணலையும், புதிய பூக்களை யுடைய சாலைகளின் வாயில்களில் மண்டபங்கள் தோறும் செம்மறி யாடுகளை அறுத்து உண்டு, அல்லிப்பாவைகள் ஆடும் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். பாணர் களின் சுற்றத்தார்கள் உண்பதற்கு அளிக்கும் உனது கொடிய போர்முனை களின் இருப்பிடம் நீ எடுத்துக் கொண்ட விழாக்கள் பலவினும் சிறப்புடையது
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே
புறநானூறு - 41.
காலனுக்கு மேலோன்!
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
திணை : வஞ்சி.
துறை : கொற்ற வள்ளை.
காலனுங் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே
திசையிரு நான்கு முற்க முற்கவும்
பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்
கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு
பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே.
பொருளுரை:
இப்பாட்டில் ஆசிரியர் கோவூர் கிழார்,
“எமனும் ஓர் உயிரைக் கொண்டு செல்ல தகுந்த நேரம் காலம் வரும் வரையில் பார்த்துக் காத்திருப்பான்!
அவ்வாறு காலம் பார்க்காமல் வேலைத் தாங்கிய பகைவர்களின் படையை அழிக்க, வேண்டிய இடத்தில் கொன்று வெற்றியை அடையக்கூடிய போர் செய்யும் வேந்தே!
உன்னைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள் எட்டுத் திசையும் எரி கொள்ளி எரிந்து விழவும், பெரிய மரங்களின் இலைகளில் லாத நீண்ட கிளைகள் காய்ந்து பட்டுப் போகவும், வெப்பக் கதிர்களை உடைய கதிரவன் கடுமையாக வெப்பத்தைப் பரப்பவும், மற்றும் அஞ்சத்தகுந்த காலநிலைகளையும்,
பிற இன்னல்களின் வரவையும் அறியும் தன்மையுடைய பறவையினங்கள் கூச்சலிட்டுக் குரலிசைக்கவும் நனவில் காண்கின்றனர்.
பற்கள் நிலத்தில் உதிர்ந்து விழுவது போலவும், எண்ணெயைத் தலையில் தேய்த்து குளிப்பது போலவும், பெண்பன்றி ஆண்பன்றி மேல் தழுவுவது போலவும்,
ஆடையைக் களைவது போலவும், வெண்மையான வலிய படைக்கலங்கள் தாமிருந்த கட்டிலினின்று கவிழ்ந்து விழுவது போலவும் கனவினிலும் காண்பதற்கு அரிதான தீமையான செயல்களை அவர்கள் காண்கின்றனர்.
நனவிலும் அத்தகைய கடுமையான போர் செய்யும் வலிமை யுடையோய்!
காற்றொடு தீ கலந்தாற்போல் படையெடுக்கும் போரில் சிறந்த வளவனே!
நீ இத்தன்மை உடையவன் ஆதலால், ’உன்னைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள்,
நீ படையெடுத்து வரும் உனது வலிமையை எண்ணி கலங்கி காவல் இல்லாது இருப்பவர்களாய் தம் குழந்தைகளின் பூப்போன்ற கண்களில் முத்தமிட்டு தம் மனைவியர்க்குத் தமது வருத்தம் தெரியாதவாறு மறைக்கும் துன்பத்தை யுடைய ஆடவர்களாய் மிக கலக்கமுற்று இருக்கி றார்கள்” என்று கொற்றவள்ளை பாடிக் கிள்ளி வளவனைச் சிறப்பிக்கின்றார்.
புறநானூறு - 44.
அறமும் மறமும்!
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி.
திணை : வாகை.
துறை : அரச வாகை.
குறிப்பு : நலங்கிள்ளி ஆவுரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்
தலமரல் யானை யுருமென முழங்கவும்
பாலில் குழவி யலறவு மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்
இன்னா தம்ம வீங்கினி திருத்தல்
துன்னருந் துப்பின் வயமான் றோன்றல்
அறவை யாயி னினதெனத் திறத்தல்
மறவை யாயிற் போரொடு திறத்தல்
அறவையு மறவையு மல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதி லொருசிறை யொடுங்குதல்
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே.
பொருளுரை:
கரிய பெண்யானைகளின் கூட்டத்தோடு பெரும் நீர்நிலைகளில் படியாதனவாய்,
நெல்லையுடைய கவளத்துடன், நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாமல் செம்மையான வலிமையான
மர அடிப்பாகத்தையுடைய கம்பத்தை ஒடித்துச் சாய்த்து நிலத்தில் புரளும் தும்பிக்கையை உடைய
வெப்பமுடைய பெருமூச்சு விட்டு அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி வரும் யானை இடி இடிப்பதுபோல் பிளிறுகின்றது.
பாலில்லாத குழந்தைகள் அலறி அழுகின்றன. பெண்கள் பூக்கள் சூடாத காய்ந்த தலைமுடியை முடிக்கவும்,
நீரில்லாத, வேலைப்பாடுடன் அமைந்த நல்ல வீடுகளில் உள்ளவர்கள் வருந்திக் கூப்பிடும் கூவலைக் கேட்கவும்
இங்கே நீ இங்கே இனிதாக இருப்பது கொடியது.
நெருங்குவதற்கரிய வலிமையும் திறமையும் கொண்ட குதிரைகளையுடைய அரசே!
நீ அறவழியில் செல்ல விரும்பினால், இந்த நாடு உன்னுடையது என்று சொல்லி
உன் கோட்டைக் கதவுகளைத் திறந்து விடு. வீர வழியில் செல்ல விரும்பினால் போர் செய்வதற்கு உன் கோட்டைக் கதவுகளைத் திறந்து விடு.
அவ்வாறு அறவழியும் இன்றி, வீரவழியும் இல்லாமல் திறக்காது அடைக்கப்பட்ட கனமான நிலைகளையுடைய கோட்டைக் கதவினையுடைய
நீண்ட கோட்டைச் சுவற்றின் ஒரு பக்கத்தில் மறைந்து பதுங்கியிருத்தல் வெட்கத்திற்குரிய செயல் ஆகும் என்கிறார் ஆசிரியர் கோவூர் கிழார்.
புறநானூறு - 45.
தோற்பது நும் குடியே!
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோர் : சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும்.
திணை : வஞ்சி.
துறை : துணை வஞ்சி.
குறிப்பு : முற்றியிருந்த நலங்கிள்ளி யையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளி யையும் பாடிய செய்யுள் இது.
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்!
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர்
நும்மோர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி உவகை செய்யும், இவ் இகலே!
பொருளுரை:
சோழ அரசனே, இந்தப் போர்க்களத்தில் உன்னை எதிர்த்து நிற்பது,
பனம்பூ சூடிய சேரன் அல்ல, வேப்பம்பூ சூடிய பாண்டியனும் அல்ல,
நீயும் ஆத்திப் பூ அணிந்திருக்கிறாய், உன்னை எதிர்த்து நிற்பவனும் ஆத்திப்பூதான் சூடியிருக்கிறான்!
போரில் நீங்கள் இருவருமே ஜெயிக்கமுடியாது, யாராவது ஒருவர் தோற்றுதான் ஆகவேண்டும்,
அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா?
இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுடைய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.
மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள்.
புறநானூறு - 46.
அருளும் பகையும்!
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : வஞ்சி.
துறை : துணை வஞ்சி.
குறிப்பு : மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.
நீயே புறவின்அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலன்உழுது உண்மார் புன்கண்அஞ்சித்
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்றமருண்டு நோக்கி
விருந்திற் புன்கண் நோவுடையர்
கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.
பொருளுரை:
நீதான் புறாவின் துன்பம் மட்டுமல்லாமல் மற்ற துன்பங்கள் பலவற்றை நீக்கிய சோழ மரபின் வழித்தோன்றல்.
இச்சிறுவர்களின் மரபினர், கற்றவர்களது வறுமையை கண்டு அஞ்சி, தமது உணவை பங்கிட்டு உண்டு, அவர்களுக்கு குளிர்ந்த நிழலாக விளங்கி வாழ்ந்தவர்கள்.
ஆனால் இங்கே, கொல்ல வரும் யானையை கண்டு அழுது, பின்பு அழுகையை மறந்து, பொலிவிழந்த தலையுடையஇச்சிறுவர்கள்,
மன்றத்தை மருண்டு நோக்கி வாழ்வில் முன்பு அறியாத புதிய துன்ப வலியை அடைந்திருக்கின்றனர்.
நான் கூறிய அனைத்தையும் நீ கேட்டாய் என்றால் இனி நீ விரும்பியதை செய்.
புறநானூறு - 47.
புலவரைக் காத்த புலவர்!
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
திணை : வஞ்சி.
துறை : துணை வஞ்சி.
குறிப்பு : சோழன் நலங்கிள்ளி யிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது.
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம்பல கடந்து,
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,
பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி,
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.
பொருளுரை:
வரையாது கொடுக்கும் வள்ளல்களை நினைத்து, நெடிய வழி என்று எண்ணாமல், பாலைவழிகள் பலவற்றைக் கடந்து,
பறவைகள் போல் சென்று, தமது தெளிவில்லாத நாவால் தம்மால் இயன்றதைப் பாடிப் பெற்ற பரிசிலைக் கண்டு மகிழ்ந்து, பிற்காலத்துக்கு வேண்டும் என்று எண்ணி, அவற்றைப் பாதுகவாமல் உண்டு,
பிறர்க்கும் குறையாது கொடுத்துத் தம்மை ஆதரிப்பவர்கள் தமக்குச் செய்யும் சிறப்புக்காக வருந்துவதுதான் பரிசிலர் வாழ்க்கை.
இத்தகைய வாழ்க்கை வாழ்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதைஅறிவார்களோ? அவர்கள் பிறர்க்குத் தீமை செய்ய மாட்டர்கள்.
புலவர்கள், கல்வி கேள்விகளால் தம்மோடு மாறுபட்டவர்களைத் தம் புலமையால் நாணுமாறு செய்து அவர்களை வெற்றி கொண்டு தலை நிமிர்ந்து நடப்பவர்கள்.
அது மட்டுமல்லாமல், அவர்கள் உயர்ந்த புகழும் உலகாளும் செல்வமும் பெற்ற உன்னைப் போன்றவர்களைப்போல் பெருமிதம் உடையவர்கள்.
புறநானூறு - 68.
மறவரும் மறக்களிரும்!
பாடியவர் : கோவூர் கிழார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை : பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
உடும்புஉரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து
ஈங்குஎவன் செய்தியோ? பாண! பூண்சுமந்து
அம்பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம்என
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகுத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே.
பொருளுரை:
பாண! உடும்பை உரித்ததுபோல் எலும்புகள் எழும்பிய விலாப் பக்கங்களை உடைய சுற்றத்தின் மிகுந்த பசியைத் தீர்ப்பாரைக் காணாமல், உன் பாடல்களைக் கேட்பவர்கள் சிலரே என்று நொந்துகொண்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?
அணிகலன்களை அணிந்த, அழகிய, பெரிய, மார்பில் சிவந்த புள்ளிகளை (தேமல்) உடையவன் நலங்கிள்ளி.
அவன் மென்மையான மகளிரிடம் பணிவாகவும், வலிமை மிகுந்த பகைவர்களைச் சிறைப்படுத்தும் பெருமையும் பொருந்தியவன்.
அவன், குழந்தை பிறந்தவுடன் பால் சுரக்கும் முலைபோல், நீர்ப் பெருகிய காவிரி, வெள்ளப் பெருக்கெடுத்து கரையிலுள்ள மரங்களை அழிக்கும் சோழ நாட்டுக்குத் தலைவன்.
தன்னுடைய படையில் ஒரு பகுதியில் உட்பகை தோன்றினால்,
பறவைகளால் நிகழும் தீய நிமித்தங்கள் நடைபெறும் பொழுது,
அப்படையைப் போருக்குச் செலுத்துவதை நிறுத்திவிடுவான். போருக்குச் செல்ல இயலாதலால், அந்தப் படைவீரர்கள்,
“ செத்து விடுவோம்” என்று கூறித் தங்கள் பருத்த தோளைத் தட்டுவர்.
அவர்கள் ஆத்திரம் தணிவதற்குத் தேரோடும் தெருக்களில்,
தாழ்ந்த ஒலியில் பறையை முழக்குவர்.
அவர்களில் சிலர், நன்கு முதிர்ந்த கள்ளைப் பருகியதால் நடுங்கும் கைகளால் அக்கள்ளைச் சிந்துவர்.
கள் சிந்தியதால், சேறாகிய தெருக்களில் பாகர்கள் இல்லாமல் திரியும் யானைகள் பெரிய நகரில் ஒலிக்கும் முரசொலியைக் காது கொடுத்துக் கேட்கும்.
அத்தகைய உறையூரில், சோழன் நலங்கிள்ளி உள்ளான்.
நீ அவனிடம் சென்றால், அதற்குப் பிறகு வேறு யாரிடத்தும் செல்வதை மறக்கும் அளவுக்கு பரிசளிப்பான்.
புறநானூறு - 70.
குளிர்நீரும் குறையாத சோறும்
பாடியவர் : கோவூர் கிழார்
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை : பாடாண்.
துறை : பாணாற்றுப்படை.
தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி;
வினவல் ஆனா முதுவாய் இரவல!
தைத் திங்கள் தண்கயம் போலக்,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்,
கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி,
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்,ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒண்ணுதல்,
இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின், செல்வை ஆகுவை;
விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்,
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!
பொருளுரை:
தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண!
குளத்தில் வாழும் ஆமையை வலிய கம்பியில் கோத்ததைப் போல் நூண்ணிய
குச்சிகளால் பொருத்தப்பட்ட தெள்ளிய கண்ணையுடைய பெரிய கிணையைக் காட்டி
“இதை இனிதே காண்க; இங்கே சற்று இருந்து செல்க” என்று கூறும் முதுமையும் வாய்மையும் உடைய இரவலனே!
கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக்
குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது. அந்நாடு,
பகைவர்களால் தீக்கிறையாக்கப்பட்டதில்லை. அங்கு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தீயை மட்டுமே காணமுடியும்.
கிள்ளி வளவன், பசிப்பணியை நீக்குவதற்குத் தேவையான நீர் வளமும் நில வளமும் மிகுந்த நல்ல நாட்டுக்கு அரசன்.
அவன் புகழை நினைவுகொள். நீ கிள்ளி வளவனை நோக்கிச் செல்லும் வழியில், நறுமணத்தை விரும்பும் வண்டுகள்
வெண்ணிற ஆம்பல் மலர்களின் மேலே ஒலிக்கும் சிறுகுடி என்ற ஊரில்,
வள்ளல் தன்மை உடைய கையையும் ஈகையில் சிறந்தவனுமான பண்ணன் என்ற ஒருவன் உள்ளான்.
பாதிரி மணம் கமழும் கூந்தலும் ஒளிபொருந்திய நெற்றியும் உடைய உன் விறலியுடன் மெல்ல மெல்ல நடந்து சிறுகுடிக்குச் செல்வாயானால்,
நீ செல்வந்தன் ஆவாய். பண்ணன் உனக்குப் பரிசுகளை அளிப்பான்.
பண்ணனின் ஈகை, விறகு வெட்டப் போனவனுக்குப் பொன்கிடைத்ததைப்போல் தற்செயலாக நடைபெறும் நிகழ்ச்சி அல்ல;
நீ அவனிடம் பரிசு பெறுவது உறுதி. பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!