சங்க இலக்கியம் - I அலகு - 3 ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு
( 1 - 20 பாடல்கள்)
நூல் குறிப்பு :
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. இது 3அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார். திணை பற்றிப் பாடுவதில் வல்லமை பெற்ற ஐம்பெரும்புலவர்கள் இந்நூலின் பாக்களை இயற்றியுள்ளனர். ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதலாந்தையார், பேயனார் என்பாரே அப்பெரும் புலவர்கள். இவர்கள் பெயரையும், இவர்கள் பாடிய திணை எது என்பதையும்
மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன் கருதும் குறிஞ்சி கபிலன் - கருதிய பாலைஓ தலாந்தை பனிமுல்லை பேயனேநூலைஓது ஐங்குறு நூறு.
என்ற பழம்பாடல் விளக்கியுள்ளது.
மருதத்திணைப் பாடல்கள் 🎀தலைவனின் பரத்தையர் பிரிவை மையமாகக் கொண்டு தலைவி கொள்ளும் ஊடலையும் ஊடல் சார்ந்த நிகழ்வுகளையும் ஒழுக்கமாகக் கொண்டது மருதத்திணை.
🎀இத்திணைக்கு வயலும் வயல் சார்ந்த இடங்களும் முதற்பொருள் ஆகும்.
🎀இப்பகுதி வாழ் மக்களும் விலங்குகளும் பறவைகளும் பிறவும் கருப்பொருளாய் அமைந்து இத்திணைப் பாடல்களை நடத்திச் செல்லும்.
🎀 இங்கு மருதத் திணைப் பாடல்களைப் பகுப்புவழிக் காணலாம்.
🛍️ வேட்கைப் பத்து
🛍️வேழப் பத்து
🛍️களவன் பத்து
🛍️தோழிக்கு உரைத்த பத்து
🛍️புலவிப் பத்து
🛍️தோழி கூற்றுப் பத்து
🛍️கிழத்தி கூற்றுப் பத்து
🛍️புனலாட்டுப் பத்து
🛍️புலவி விராய பத்து
🛍️எருமைப் பத்து
ஆகிய பத்துப் பகுதிகள் இந்த மருதம் பகுதியில் உள்ளன.
I. வேட்கை பத்து
🎀வேட்கை = விருப்பம், பத்து = பத்துப் பாடல்கள்.
🎀 களவிலோ, கற்பிலோ தலைவியைப் பிரிந்திருந்த தலைமகன் தான் பிரிந்திருந்த காலத்துத் தலைமகள் எவ்வாறு ஆற்றியிருந்தாள் என்பதை அறிய விரும்புவான்.
🎀அப்போது தோழி, தலைவி விரும்பிய திறத்தையும் (வகையையும்) தான் விரும்பிய திறத்தையும் எடுத்துக் கூறுவாள்.
🎀இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வேட்கைப் பத்து என அமைக்கப்பட்டுள்ளது.
🎀இதில் உள்ள பத்துப் பாடல்களும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று பொல்லிவிட்டுத் தொடங்குகின்றன.
🎀இது தன் நாட்டு அரசனை வாழ்த்தும் பகுதி.
🎀தலைவி, அரசன் சிறந்து வாழ வேண்டும். நாட்டில் வளம் சிறக்க வேண்டும் என்று விரும்பி வேண்டி வாழ்ந்தாள். 09
🎀தோழி தலைவனின் பரத்தமையை நினைந்து அவன் மீள வரவேண்டும் என்று விரும்பி வேண்டி வாழ்ந்தாள் என்ற செய்தியைத் தருகிறது.
🎀 இது பரத்தையர் பிரிவு குறித்து அமைந்திருப்பதால் கற்பு வாழ்க்கை, கற்பு என்ற கைகோள் குறித்த பாடலாகிறது
பாடல் - 1
வாழி ஆதன் வாழி அவினி
நெல்பல பொலிக பொன்பெரிது சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சி சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே
🎍தலைவி , நெல்லின் விளைச்சல் பெருகி பொன்வளம் சிறக்கவேண்டும் வேண்டிக்கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ
அரும்புகள் கொண்ட காஞ்சி மரமும், கருவுற்று முட்டைகளையுடைய சிறிய மீன்களும் வாழும்
புதுவருவாய் மிகுந்த ஊரினைச் சேர்ந்த எம் தலைவன் வாழ்க,
அவனது பாணனும் வாழ்க என்று வேண்டினோம்.
பாடல் 2
வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோளே யாயே யாமே
பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
தண் துறை ஊரன் கேண்மை
வழிவழி சிறக்க என வேட்டேமே
🎍 தலைவி, விளைச்சல் பெருகவேண்டும், நான் வழங்க இரவலர் மிகுதியாக வர வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ பலவான இதழ்களைக் கொண்ட நீலமலரோடு, நெய்தலும் ஒப்பாக விளங்கும் குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு வழிவழியாகச் சிறந்து விளங்கட்டும் என்று வேண்டினோம்.
பாடல் 3
வாழி ஆதன் வாழி அவினி
பால் பல ஊறுக பகடு பல சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூ கஞல் ஊரன்_தன் மனை
வாழ்க்கை பொலிக என வேட்டேமே
🎍தலைவி, பசு பால் ஊறவேண்டும், உழும் எருதுகள் பெருகவேண்டும் என வேண்டிக் கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ விதைவிதைத்த உழவர்கள் அவை விளைந்ததால் மிகுந்த நெல்லோடு திரும்பும் பூக்கள் நிரம்பிய ஊரினைச் சேர்ந்த தலைவனின் மனையற
வாழ்க்கை சிறந்து விளங்கட்டும் என்று வேண்டினோம்.
பாடல் 4
வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக
என வேட்டோளே யாயே யாமே
பூத்த கரும்பின் காய்த்த நெல்லின்
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க என வேட்டேமே
🎍தலைவி, பகைவர் இறந்து பார்ப்பார் ஓதித் தரும் புல்லுணவை உண்ண வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ நன்கு பூத்த கரும்புப் பயிரையும், காய்த்து விளைந்த நெற்பயிரையும் உடைய வயல்வெளி களைக் கொண்ட ஊரினைச் சேர்ந்த தலைவனின் மார்பானது ஊர்ப்பொதுவான நீர்நிலையாகாமல் எமது தலைவிக்கே உரித்தாட்டும் என்று வேண்டினோம்.
பாடல் 5
வாழி ஆதன் வாழி அவினி
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக
என வேட்டோளே யாயே யாமே
முதலை போத்து முழு_மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேர் எம்
முன்கடை நிற்க என வேட்டேமே
🎍 தலைவி , உலகில் எல்லாரும் பசி, பிணி இல்லாமல் இருக்கோண்டும் என வேண்டிக் கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ ஆண் முதலை யானது முற்ற வளர்ந்த மீன்களை நிறைய உண்ணும் குளிர்ந்த நீர்த்துறையை உடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் தேர் எமது
வீட்டின் முன்வாயிலிலேயே நீங்காது நிற்பதாக என்று வேண்டினோம்.
பாடல் 6
வாழி ஆதன் வாழி அவினி
வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக
என வேட்டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரை
தண் துறை ஊரன் வரைக
எந்தையும் கொடுக்க என வேட்டேமே
🎍தலைவி, வேந்தன் பகைமை உள்ளம் தணிந்து நெடிது வாழவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ அகன்று விரிந்த பொய்கையில் மொட்டுகள் விட்டிருக்கும் தாமரையையுடைய குளிர்ந்த நீர்த்துறை யையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம்பேசி வருக, எம் தந்தையும் இவளை அவனுக்குக் கொடுக்கட்டும் என்று வேண்டினோம்.
பாடல் 7
வாழி ஆதன் வாழி அவினி
அறம் நனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே
உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும்
தண் துறை ஊரன்_தன் ஊர்
கொண்டனன் செல்க என வேட்டேமே
🎍தலைவி , ஊரில் அறம் சிறக்க வேண்டும், அறமல்லாத மறம் இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள்.
🎍 தோழியராகிய நாங்களோ மேலே பஞ்சு போன்ற நார்முடியைக் கொண்ட பூவினை யுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள் இருக்கும் குளிர்ந்த நீர்த்துறை யையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் தனது ஊருக்கு இவளை மணமுடித்து அழைத்துச் செல்லட்டும் என்று வேண்டினோம்.
பாடல் 8
வாழி ஆதன் வாழி அவினி
அரசு முறை செய்க களவு இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும்
பூ கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பது ஆக என வேட்டோமே
🎍தலைவி , அரசன் நடுவுநிலை தவறாமல் தீர்ப்பு வழங்க வேண்டும், நாட்டில் திருட்டு இருக்கக்கூடாது என வேண்டிக் கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ அசைந்தாடும் கிளைகளையுடை மாமரத்தில் அழகான மயில்கள் இருக்கும் பூக்கள் நிரம்பிய ஊரினைச் சேர்ந்த தலைவனின் சூளுரைகள் இப்போது நிறைவாக வாய்த்து நிற்கட்டும் என்று வேண்டினோம்.
பாடல் 9
வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக
என வேட்டோளே யாயே யாமே
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே
🎍தலைவி , நல்லதே நடக்க வேண்டும். தீது நடக்கக் கூடாது என வேண்டிக் கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ கயல்மீன்களை நிறைய உண்ட நாரை, நெற்போரில் சென்று தங்கும் குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் நட்பு
பிறர் அறிவதால் பழிச்சொல் எழுப்பாதிருக்கட்டும் என்று வேண்டினோம்.
பாடல் 10
வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளம் நனி சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன்
தண் துறை ஊரன் தன்னோடு
கொண்டனன் செல்க என வேட்டேமே
🎍தலைவி , மழை பொழிந்து வளம் கொழிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
🎍தோழியராகிய நாங்களோ பூத்த மாமரங் களையும், புலால் நாறும் சிறுமீன்களையும் உடைய குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவன் மணம்முடித்து இவளைத் தன்னோடு அழைத்துச் செல்லட்டும் என்று வேண்டினோம்.
II . வேழப்பத்து
🎀மருத நிலத்துக் கருப்பொருள்களில் ஒன்று வேழம் எனக் குறிக்கப்படும் வேழக் கரும்பு.
🎀இவ்வேழக் கரும்பு இடம் பெறும் பத்துப் பாடல்களின் தொகுதி வேழப் பத்து என்று குறிக்கப்படுகிறது.
🎀வேழம் என்பது ஆற்றங்கரையில் கரும்பு போல் வளரும் பேய்க்கரும்பு.
🎀வேழத்தை வயலைக் கொடி சுற்றும். வேழம் கரும்பு போல் பூக்கும். அதன் பூ வெண்குதிரையின் பிடரிமயிர் போல இருக்கும்.
🎀வேழம் வளர்ந்து அருகிலுள்ள மாந்தளிரை மடக்கும். புனலாடும் மகளிர் புணர மறைவிடமாகி உதவும்.
🎀அப்போது அவர்களின் நெற்றிக் குங்குமம் அதன் வேரில் ஒட்டிக்கொள்ளும். 🎀அதன் பூ வானத்தில் பறக்கும் குருகின் சிறகு போல் இருக்கும். செருந்திப் பூவோடு வேழம் மயங்கிக் கிடக்கும்.
🎀உதிர்ந்த மாம்பூ புணர்ந்தோர் உடம்பு மணம் கமழ, அதன்மேல் வேழப்பூ உதிர்ந்து மணத்தை மறைக்கும்.
🎀மாம்பூவில் மொய்க்கும் வண்டின் சிறகு போல் பூக்கும்.
🎀வேழம் பூக்கும் ஊரன் அவன். அவனை எண்ணி என் தோள், கண் முதலான உறுப்புக்கள் நலன் இழந்தன என்கிறாள் தலைவி.
பாடல் 11
மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே
🎋வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி (பசலைக்கொடி) வேழக்கரும்பைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஆற்றுத்துறையை உடையவன் ஊரன்.
🎋அவன் வாராத கொடுமையை மறைக்க நாணங்கொண்டு நான் நல்லவன் என்கிறேன்.
🎋 என் தோள்களோ வாட்டமுற்று நல்லவன் அல்லன் என்று காட்டிக்கொடுத்து விடுகின்றன.
🎋பாணன் முதலாயினார்க்குத் தலைமகன் கொடுமை கூறி வாயில் மறுத்த தலைமகள், கழறிய பாங்கற்கு வாயில் நேர்வாள், சொல்லியது.
🎋'தலைவன் எவ்வாறு தப்பி ஒழுகினும், அவன் கொடுமை நின்னால் புலப்படுதல் தகாது' என்று கழறிய பாங்கிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.
பாடல் 12
கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்க தில்ல என் தட மென் தோளே
🎋கரையில் இருக்கும் வேழம் கரும்பைப்போல் பூத்து ஏமாற்றும் துறையை உடையவன் ஊரன்.
🎋அவன் என்னிடம் வாராதிருக்கும் பொடுமையை நான் ஆற்றிக்கொள்கிறேன். 🎋அவனை நினைத்து வாடும் என் தோள் தோற்றுப்போகிறது.
🎋உழையர் நெருங்கிக் கூறிய திறமும் தனது ஆற்றாமையும் நினைந்து, வாயில் நேரக் கருதிய தலைமகள், 'பரத்தையர்க்குப் பின்பும் அவன் சிறப்புச் செய்தான்' என்பது கேட்டு, பொறாளாய்க் கருத்து அழிந்து, தன்னுள்ளே சொல்லியது.
பாடல் 13
பரி உடை நன் மான் பொங்கு உளை அன்ன
அடைகரை வேழம் வெண் பூ பகரும்
தண் துறை ஊரன் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே
🎋பாய்ந்தோடும் குதிரையின் பிடரிமயிர் போன்று பூப் பூக்கும் துறையை உடையவன் ஊரன்.
🎋அவன் காமப்பெண்டிர் நள்ளிரவில் தூங்காமல் கிடப்பார்களே! என அவனுக்காகத் தூது வந்தவர்களிடம் அவன் மனைவி சொல்கிறாள்.
🎋 வாயிலாய்ப் புக்கார்க்குத் தலைமகள், 'அவன் பெண்டிர் நள்ளென் யாமத்தும் துயிலார்; அவர் அறியாமல் அவன் வரும் திறம் யாது?' எனச் சொல்லி வாயில் மறுத்தது.
பாடல் 14
கொடி பூ வேழம் தீண்டி அயல
வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணி துறை வீரன் மார்பே
பனி துயில் செய்யும் இன் சாயற்றே
🎋கொடியில் பூக்கும் பூக்கள் படர்வதற்காக வேழத்தைத் தொடும்.
🎋பின்னர் அங்கிருந்து வடிவழகு கொண்ட மாந்தளிரைப் பற்றி அதனை வளைக்கும். 🎋இப்படிப்பட்ட துறையை உடையவன் ஊரன். அவன் மார்பு பனிக்காலத்தில் இன்பமாகச் சாய்ந்து உறங்க ஏந்தாக இருக்கும்.
🎋தலைமகள் புணர்ச்சி வேட்கையைக் குறிப்பினான் உணர்ந்த தோழி, 'அவன் கொடுமை நினையாது அவன் மார்பை நினைந்து ஆற்றாயாகின்றது என்னை?' என்றாட்கு, அவன் கொடியனேஆயினும், அவன் மார்பு குளிர்ந்த துயிலைச் செய்யும் இனிய சாயலை உடைத்து’ ஆதலால் காண்’ எனச் சொல்லியது
பாடல் 15
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே
🎋ஊரனின் ஊர் வேழம் மிகுதியாக உடையது. அங்குள்ள மணலை விரும்பிப் படர்ந்து பூத்துக்கிடக்கும் கொடியிலுள்ள தழையானது நீராடிய மகளிர் உடுத்திக்கொள்ளும் தழையாடையாக உதவும்.
🎋ஊரனோ ஊரில் இருந்தும் (தேரில்) ஊர்ந்து வருபவன் அல்லன் ஆகிவிட்டான்.
🎋சேணிடைப் பிரிந்து வந்து உடன் உறைகின்ற தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகின்றது என்று குறிப்பினான் உணர்ந்து, தலைமகள் வேறுபட்டாளாக, தோழி அதனை அறியாது, ' அவன் உடன்உறையவும் வேறுபடுகின்றது என்னை?' என்றட்கு அவள் சொல்லியது.
பாடல் 16
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால்
சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூ கஞல் ஊரனை உள்ளி
பூ போல் உண்கண் பொன் போர்த்தனவே
🎋அஞ்சனம் என்பது மகளிர் தலையில் செருகிக்கொள்ளும் பூ. உள்ளே துளை கொண்ட வேழத்துப் பூ அவ்வாறு செருகிக்கொள்ள உதவும்.
🎋இந்த வேழப் பூ மண்டிக்கிடக்கும் துறையை உடையவன் ஊரன். வாராத அவனை எண்ணி எண்ணிப் பூப்போல் இருந்த என் கண் பசலை பூத்துப் பொன்னிறம் (மஞ்சள்)நிறம் பெற்றுக் கிடக்கின்றன.
🎋வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது.
பாடல் 17
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்
புதுவோர் மேவலன் ஆகலின்
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே
🎋புதரில் ஆடிக்கொண்டிருக்கும் வேழத் தட்டையின் வெள்ளைநிறப் பூ வானத்தில் குருகுப் பறவை பறப்பது போல் தோன்றும் ஊரன் அவன்.
🎋அவன் புதிய பெண்ணை விரும்பிச் சென்றதால் என் மடத்தனமான நெஞ்சு வெறிச்சோடிக் கிடக்கிறது.
🎋தலைமகன் பரத்தையிற் பிரிந்த வழி, 'இவ்வாறு ஒழுகுதலும் ஆடவர்க்கு இயல்பு அன்றே; நீ இதற்கு நெஞ்சு அழிகின்றது என்னை?' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பாடல் 18
இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்
பொருந்து மலர் அன்ன என் கண் அழ
பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே
🎋பருத்திருக்கும் நாணல் புல் போல வளர்ந்திருக்கும் செருந்தியோடு ஒப்பிட்டு நோக்கும்படி அந்தச் செருந்தியோடு சேர்ந்து வேழமானது கரும்போடு ஒப்பிட்டு நோக்கும்படிப் பருத்து வளர்ந்திருக்கும் ஊரன் அவன்.
🎋உன்னை விட்டுவிட்டு என்றும் பிரியமாட்டேன் என்று சொல்லிய அவன் மலர் போன்ற என் கண் அழும்படி விட்டுவிட்டுப் பிரிந்து வாழ்கிறானே!
🎋 பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது
பாடல் 19
எக்கர் மாஅத்து புது பூ பெரும் சினை
புணர்ந்தோர் மெய்ம் மணம் கமழும் தண் பொழில்
வேழ வெண் பூ வெள் உளை சீக்கும்
ஊரன் ஆகலின் கலங்கி
மாரி மலரின் கண் பனி உகுமே
🎋உடலுறவு கொண்டவரின் மேனி போல் மாம்பூ மணம் கமழும் பொழில் சூழ்ந்த ஊரன் அவன்.
🎋இப்போது வேழம் விளைந்திருக்கும் வெள்ளைப் பூக்களை வேறொருத்தியோடு (கோழி மண்ணைச் சீய்ப்பது போல்) சீய்த்துத் தேன் உண்டவண்ணம் இருக்கிறானே!
🎋பல் நாள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளையாகிய நீ சில் நாள் அவன் புறத்து ஒழுகுகின்ற இதற்கு ஆற்றாயாகின்றது என்னை?' என்ற தோழிக்கு, 'எதிர்ப்பாடு இன்றி ஓர் ஊர்க்கண்ணே உறைகையினாலே ஆற்றேனாகின்றேன்' எனத் தலைமகள் சொல்லியது
பாடல் 20
அறு சில் கால அம் சிறை தும்பி
நூற்று இதழ் தாமரை பூ சினை சீக்கும்
காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்து
துறை நணி ஊரனை உள்ளி என்
இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே
🎋ஆறு கால்களையும் அழகிய சிறகுகளையும் உடைய தும்பி நூற்றுக்கணக்கான இதழ்களை உடைய தாமரை மொட்டை உள்ளே நுழையச் சீய்க்கும்.
🎋அந்தத் தாமரையின் தண்டு போல் உள்ளே துளை கொண்டதாய் இருக்கும் வேழம் விளைந்திருக்கும் துறையை உடைய ஊரன் அவன்.
🎋அவனை நினைத்துக்கொண்டு என் கணுக்கை வளையல்கள் கழன்று அவனிடம் ஓடுகின்றனவே!
🎋தலைமகளை வாயில் நேர்வித்தற் பொருட்டாக, 'காதலர் கொடுமை செய்தாராயினும், அவர் திறம் மறவாதொழியல் வேண்டும்' என்று முகம்புகுகின்ற தோழிக்கு, 'என் கைவளை நில்லாதாகின்றது அவரை நினைந்ததன் பயன் அன்றே; இனி அமையும்' எனத் தலைமகள் சொல்லியது.