சங்க இலக்கியம் - I அலகு - 2 அகநானூறு மணிமிடைப் பவளம் ( 1 - 15 )
அகநானூறு
மணிமிடைப் பவளம்
பாடல் 121
பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்
திணை : பாலை
துறை : தலைமகன் நெஞ்சிற்கு சொல்லியது
"நாம்நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல்
வேனில் நீடியவான்
உயர் வழிநாள்,
வறுமை கூரியமண்
நீர்ச்சிறு குளத்
தொடுகுழி மருங்கில்
துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக்
கயந்தலை மண்ணி"
🌻நெஞ்சே! நினைத்தால் நமக்கே சிரிப்பு வருகிறது.இது வேனில் பருவம் நீண்டு கொண்டிருக்கும் காலம்.
🌻வானம் மண்ணில் பொழியாமல் மேலே சென்று கொண்டு
இருக்கும் நாள்.
🌻எங்கும் வறட்சி.
🌻குளத்தில் மண்ணும் நீருமாகக் கலங்கிக் கிடக்கும்.
🌻குளத்தில் தோண்டிய சிறிய குழியில் உண்ண முடியாத கலங்கல் நீர் நிற்கும்.
"சேறுகொண்டு ஆடிய
வேறுபடு வயக்களிறு
செங்கோல் வால்இணர்
தயங்கத் தீண்டி,
சொரிபுறம் உரிஞிய
நெறிஅயல் மராஅத்து
அல்குறு வரிநிழல்
அசைஇ, நம்மொடு
தான்வரும் என்ப,
தடமென் தோளி"
🌻பெண்யானை கன்றுடன் இறங்கி, தலையில் அந்த நீரை வாரி ஊற்றிக் கொள்ளும்.
🌻 ஆண்யானை அதன் சேற்றில் குளிக்கும். 🌻(உடம்பில் படிந்த சேறு காய்ந்து உடம்பு அரிப்பதால்) மரா மரத்துச் சிவந்த இலைக்கொம்புகளை ஒடித்து முதுகில் சொரிந்து கொள்ளும்.
🌻 ஆங்காங்கே தென்படும் அந்த நிழலில் நம்மோடு தங்கி, என் காதலி தடமென் தோளி வரவிருக் கிறாள் என்று தோழி சொல்கிளாள்.
"உறுகண் மழவர்
உருள் கீண்டிட்ட
ஆறுசெல் மாக்கள்
சோறுபொதி வெண்குடை
கனைவிசைக் கடுவளி
எடுத்தலின், துணை செத்து
வெருள் ஏறு
பயிரும் ஆங்கண்,
கருமுக முசுவின்
கானத்தானே"
🌻 பிறரைத் துன்புறுத்தும் மழவர்கள் அங்கு வாழ்வார்கள். அவர்கள் கிழங்கு (உருள்) எடுக்க மண்ணைத் தோண்டுவர்.
🌻அந்த வழியில் வருவிருக்கிறாளாம்.
🌻 பெருத்த (கனை) விசையுடன் காற்று வீசுவதால், கருமுக முசுக் குரங்கின் ஆண், அஞ்சி நடுங்கும் தன் துணைப் குரங்கை அழைக்கும் அந்தக் காட்டில் வரவிருக்கி றாளாம்.
🌻 இவ்வாறு தலைவன் கூறுகிறான்.
பாடல் 122
பாடியவர் : பரணர்
திணை : குறிஞ்சி
துறை : தலைமகன் சிறைப்புறத்தானாக தோழிக்குச் சொல்லுவாளாய் தலைவி சொல்லியது
"இரும்பிழி மகாஅர்
இவ்அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும்
துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண
மறுகு உடன் மடியின்,
வல்உரைக் கடுஞ் சொல்
அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை
அன்னை துஞ்சின்"
பெரிய அளவில் பிழிந்தெடுக்கும் மக்களைக் கொண்டது இந்த ஊர்.
இந்த ஊரில் திருவிழா இல்லாவிட்டாலும் மக்கள் உறங்காமல் மகிழ்ந்திருக்கின்றனர்.
கடைத்தெருவில் உள்ள மக்கள் தூங்கினாலும் கண்டித்துக் கடுஞ்சொல் பேசும் தாய் தூங்காமல் இருக்கிறாள்.
" துஞ்சாக் கண்ணர்
காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர்
துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை
ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி
மகிழாது மடியின்,
பகல் உரு உறழ
நிலவுக் கான்று விசும்பின்"
என்னை வீட்டில் சிறை வைத்திருக்கும் தாய் தூங்கினாலும் தூங்காமல் ஊரைக் காக்கும் காவலர் விரைந்து நடமாடிக் கொண்டிருக்கின்றனர். வேலைக் கையில் வைத்திருக்கும் காவல் இளையர் தூங்கினாலும், வலப்புறமாக மயிர்முடி சுருண்டிருக்கும் ஞாளி-நாய் மகிழ்வுடன் குரைத்துக்கொண்டிருக்கும்.
"அகல்வாய் மண்டிலம்
நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு
கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி
வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து
அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல்
வாளாது மடியின்"
என்னை உரைகல்லாக்கி அரத்தால் உரைக்கும் ஞமலி-நாய் குரைக்காமல் அடங்கினால், வானத்தில் பகல் போல் ஒளியை விரித்துக்கொண்டு நிலா காயும்.
நிலா மலைக்குப் பின்னால் மறைந்துவிட்டால், இருள் வந்துவிடும். அப்போது இருட்டில் எலியைப் பிடிக்கும் கூவும். பேய் நடமாட்டம் உள்ள யாமத்தில் என்னை அழிப்பது போல் கூவும்.
"மனைச் செறி கோழி
மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்த
காலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து
அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில்
ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய
பாய்பரி நன் மா"
வளைந்த கொட்டைக்கண் கொண்ட அந்தக் கோட்டான் சேவல் குரல் கொடுக்காமல் மடிந்துவிட்டால், வீட்டிலே அடைத்து வைத்திருக்கும் கோழிச்சேவல் விடியலாகிவிட்டது என்று குரல் எடுத்துக் கூவும்
" நொச்சி வேலித்
தித்தன் உறந்தைக்
கல் முதிர்
புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால்
தோழி! நம் களவே"
இவை அனைத்தும் அவர் என்னிடம் வருவதற்கு இருக்கும் தடைகள். இந்த முட்டுப்பாடுகள் அனைத்தும் மடிந்திருக்கும் நாள் ஒன்று வருமானால் அந்த நாளில் அவர் வரமாட்டார். அதனால், தோழி, திருட்டுத்தனமாக (களவு-ஒழுக்கம்) அவர் என்னை அடைவதற்கு இருக்கும் முட்டுப்பாடுகள் உறையூர் அரசன் தித்தன் காலத்தில் உறையூரைச் சுற்றியிருந்த காவல்காடு போல் பல தடைகளை உடையதாக இருக்கிறது. தித்தன் அம்பறாத் தூணியில் அம்புகளை மாட்டிக்கொண்டு ஆதி தாளம் போல் ஒலி கேட்கும்படி நடைபோடும் குதிரைமேல் செல்லும் பழக்கம் கொண்டவன். தலைவி தன் தோழியிடம் இப்படிக் கூறுகிறாள்.
பாடல் 123
பாடியவர் : காரிக் கண்ணனார்
திணை : பாலை
துறை : தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
"உண்ணாமையின்
உயங்கிய மருங்கின்
ஆடாப் படிவத்து
ஆன்றோர் போல,
வரை செறி சிறு நெறி
நிரைபுடன் செல்லும்
கான யானை
கவின் அழி குன்றம்
இறந்து, பொருள் தருதலும்
ஆற்றாய்; சிறந்த"
🌻நெஞ்சே! பொருள் கொண்டுவரச் செல்கிறாய்.
🌻அதில் பற்றி நிற்காமல் இடையில் உன் காதலியை நினைத்துக்கொண்டு வருந்துகிறாயே, சரியா என்று தலைவன் வினவுகிறான்.
🌻உண்ணாமையால் தவம் செய்யும் ஆன்றோர் வயிறு வாடிக் கிடக்கும்.
🌻நீராடாமலும் அவர்கள் இருப்பார்கள்.
🌻அவர்களைப் போன்று மழையில்லாமல் மெலிந்திருக்கும் காட்டு வழியில் யானைக்கூட்டம் செல்லும் அழகிழந்த குன்றத்தில் செல்கிறாய்.
"சில் ஐங் கூந்தல்
நல் அகம் பொருந்தி
ஒழியின், வறுமை
அஞ்சுதி; அழிதகவு
உடைமதி வாழிய,
நெஞ்சே! நிலவு என
நெய் கனி நெடு
வேல் எஃகின் இமைக்கும்
மழை மருள் பல் தோல்
மா வண் சோழர்"
🌻அப்படியே பொருளைக் கொண்டுவரச் செல்லவும் உன்னால் முடியவில்லை.
🌻உன்னவளது சிலவாகிய மென்மையான கூந்தலுக்குள் பொதிந்து கிடக்கலாம் என்றாலும் வறுமை வந்துவிடுமே என்று அஞ்சுகிறாய்.
🌻உன்னை நீயே கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கிறாய்.
🌻நெஞ்சே, நீ வாழ்க.
" கழை மாய் காவிரிக்
கடல் மண்டு பெருந் துறை,
இறவொடு வந்து
கோதையொடு பெயரும்
பெருங் கடல்
ஓதம் போல,
ஒன்றில் கொள்ளாய்,
சென்று தரு பொருட்கே"
🌻காவிரி ஆறு கடலோடு கலக்குமிடத்தில் அலையானது இறா மீனோடு ஏறி வந்து மக்கள் எறிந்த மாலையோடு இறங்கித் திரும்புவது போல நீ பொருள் மாட்டும், அவள் மாட்டும் சென்று திரும்பிக்கொண்டிருக்கிறாய்.
🌻நான் என்ன செய்யட்டும், என்கிறான் தலைவன்.
🌻காவிரி கடலோடு கலக்குமிடம் கொடைவள்ளல்களாக விளங்கும் சோழர்களுக்கு உரியது.
🌻அவர்கள் எண்ணெய் பூசிய நீண்ட வேலும், மழைமேகம் போன்ற கவசங்களும் உடையவர்கள்.
பாடல் 124
பாடியவர் : இள வேட்டனார்
திணை : முல்லை
துறை : தலைவன் தேர்ப்பாகன் இடம் உரைத்தது
"நன் கலம் களிற்றொடு
நண்ணார் ஏந்தி,
வந்து திறை கொடுத்து,
வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக'' என்ப
ஆயின், வேந்தனும்
நிலம் வகுந்துறாஅ
ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல்
வாய்வது; நன்றே.
மாட மாண் நகர்ப்
பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை
நம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம்
வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன
பொன் இயற் புனை படை,
கொய்சுவல், புரவி
கை கவர் வயங்கு பரி
வண் பெயற்கு அவிழ்ந்த
பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி
ஊதுவண்டு இரிய,
காலை எய்த,
கடவுமதி மாலை
அந்திக் கோவலர்
அம் பணை இமிழ் இசை
நிரை நிலை ஞாயில்
நெடு மதில் ஊரே"
தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். பகைவர்கள் நல்ல அணிகலன்களையும், யானைகளையும் வேந்தனுக்குத் திறையாகத் தந்தனர். வேந்தனும் அதனை ஏற்றுக்கொண்டு “செல்லுங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டான். எனவே நிலம் கொள்ளாத வேந்தன் படை இன்றே திரும்பிவிடும். ஆகவே குதிரைகளைப் பூட்டி நம் தேரை விரைந்து செலுத்துக. விடியற் காலையிலேயே ஊரை அடையுமாறு ஓட்டுக. மாடத்தின் நடுவிலே இருக்கும் பல அடுக்கு மெத்தை மேல் காதலியின் வருத்தத்தைத் தீர்க்க வேண்டும். நாம் பாசறையில் பட்ட வருத்தத்தையும் போக்க வேண்டும். பிரிந்தமைக்காக பிணக்குப் போட்டுக்கொள்ளாமல் இருக்கும் காதலியின் வருத்தத்தைப் போக்க வேண்டும். நீயும் உன் காதலியின் வருத்தத்தைப் போக்க வேண்டும்.
புரவி – மின்னலை நிமிர்த்தி வைத்தாற் போல பொன்னணி பூண்ட குதிரை. கழுத்து மயிர் கத்தரிக்கப்பட்ட குதிரை. கடிவாளத்தைக் கையில் பற்றி ஓட்டும் குதிரை. இப்படிப்பட்ட குதிரை பூட்டிய தேரை ஓட்டுக. மழை பொழிந்து பூத்துக் கிடக்கும் முல்லையில் தேன் உண்ணும் வண்டுகள் பறந்தோடும்படி ஓட்டுக. இப்போது அந்தி நேரம். மாளிகையில் இருக்கும் மதில் ஞாயிலில் முரசு முழங்கும் இசை கேட்டுக்கொண்டிருக்கும். அங்கு, விடியுமுன் செல்லுமாறு ஓட்டுக.
பாடல் 125
பாடியவர் : பரணர்
திணை : பாலை
துறை : தலைவன் வினைமுற்று மீண்டு வந்தமை குறித்து தோழி சொல்லியது
🌻என்னை வாட்டும் வாடைக்காற்றே! அவர் வந்தால் நீ ஓடிவிடுவாய், என்கிறாள் தலைவி.
🌻வாளால் அறுத்துச் செய்யப்பட்ட வளையல் தோளிலிருந்து நழுவும்படி என்னை விட்டுவிட்டு வாழ்க்கையில் நேரும் வறுமையைப் போக்கவேண்டி அவர் பொருள் தேடச் சென்றிருக்கிறார்.
"அரம் போழ் அவ் வளை
தோள் நிலை நெகிழ,
நிரம்பா வாழ்க்கை
நேர்தல் வேண்டி
இரங் காழ் அன்ன
அரும்பு முதிர் ஈங்கை
ஆலி அன்ன வால்
வீ தாஅய்,
வை வால் ஓதி
மைஅணல் ஏய்ப்பத்
தாது உறு குவளைப்
போது பிணி அவிழ,
🌻முத்து மாலை (இரம் காழ்) போல் அரும்பு விட்டுப் பூத்திருக்கும் ஈங்கை, மழைக்கட்டிகள் போல மலர்களைக் கொட்டுகிறது.
🌻கூர்மையான வாலை உடைய பச்சோந்தியின் தாடி போல, தேன் சிந்தும் குவளை மலர்கள் பூத்திருக்கின்றன.
படாஅப் பைங் கண்
பா அடிக் கய வாய்க்
கடாஅம் மாறிய
யானை போல,
பெய்து வறிது ஆகிய
பொங்கு செலற் கொண்மூ
மை தோய் விசும்பின்
மாதிரத்து உழிதர,
🌻துணிப்படாம் போர்த்தியதும், பரந்த அடிகளை உடையது மாகிய யானை மதம் பொழியாதது போல, வறட்டு மேகங்கள் வானில் மேய்கின்றன.
பனி அடூஉ நின்ற
பானாட் கங்குல்
தனியோர் மதுகை
தூக்காய், தண்ணென,
முனிய அலைத்தி,
முரண் இல் காலை;
கைதொழு மரபின்
கடவுள் சான்ற
செய்வினை மருங்கின்
சென்றோர் வல் வரின்
விரிஉளைப் பொலிந்த
பரியுடை நல் மான்
வெருவரு தானையொடு
வேண்டு புலத்து இறுத்த
பெரு வளக் கரிகால்
முன்னிலைச் செல்லார்,
🌻பனி கொட்டுகிறது.
🌻 நள்ளிரவு வேளை.
🌻வாடைக் காற்றே, நீ தனியே இருப்பவரின் வலிமையை எண்ணிப் பார்க்காமல், அவர்கள் உன்மீது சினம் கொள்ளும்படி அவர்களை அடிக்கிறாய்.
🌻எந்தப் பகையும் இல்லாத காலத்தில் அடிக்கிறாய் (முரன் இல் காலை).
🌻மரபு வழிக் கடவுளாகத் தொழத் தக்க சான்றோர் என் கணவர்.
🌻அவர் பொருளீட்டிவரச் சென்றுள்ளார்.
🌻 அவர் வந்துவிட்டால் நீ விரைந்து ஓடிவிடுவாய்.
சூடா வாகைப்
பறந்தலை, ஆடு பெற
ஒன்பது குடையும்
நன் பகல் ஒழித்த
பீடு இல்
மன்னர் போல,
ஓடுவை மன்னால்
வாடை! நீ எமக்கே."
🌻அச்சம் தரும் படையுடன், குதிரை மேல் சென்று, வேற்று நாட்டு வாகைப்பறந்தலை என்னும் ஊரில் அரசன் கரிகாலன் தாக்கிய போது,
🌻அவனைத் தாக்கிய ஒன்பது மன்னர்களும், ஒருநாள் பகல் பொழுது கூட, அவன் முன் எதிர்த்து நிற்க முடியாமல் தம் கொற்றக் குடைகளைப் போர்க்களத்தி லேயே போட்டுவிட்டு ஓடியது போன்று, வாடையே, நீ ஓடுவது உறுதி.
பாடல் 126
பாடியவர் : நக்கீரர்
திணை : மருதம்
துறை : தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
"நின் வாய் செத்து
நீ பல உள்ளி,
பெரும் புன் பைதலை
வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த
மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர்
தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும்
காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து
அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாட்
போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக்
கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி,
அம் சொல், பாண்மகள்,
நெடுங் கொடி நுடங்கும்
நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின்
முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு
நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பிற்
பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி
அடக்கவும் அடங்கான்,
பொன் இணர் நறு மலர்ப்
புன்னை வெஃகி,
திதியனொடு பொருத
அன்னி போல
விளிகுவைகொல்லோ,
நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும்
செவ் வாய், பெரிய
கயல் என அமர்த்த
உண்கண், புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய
பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல்,
குறுமகள்
பின்னிலை விடாஅ
மடம் கெழு நெஞ்சே?"
காதலியைப் பெறமுடியாமல் போன காதலன் பலவாறு நினைத்துப் பிதற்று கிறான். நெஞ்சே! உனக்கு வாய்த்தவள் போல (செத்து) எண்ணிக்கொண்டு பெரிதும் துன்பப்பட்டு வருந்துகிறாய். மலைமேல் பொழிந்த மழையால் பெருகி வரும் வெள்ளம் அன்று பூத்த புது மலர்களைத் துறைக்குக் கொண்டு வரும் ஆறு காவிரி. அதன் மணலே கலங்கும்படி பாணர் மீன் பிடிப்பர். அப்படிப் பாண்மகள் ஒருத்தியின் தந்தையும், அண்ணனும் பிடித்துவரும் வாளைமீனைப் பாண்மகள் விற்பாள். அவளுக்கு அழகிய சுருங்கிய வயிறு. அழகிய சொற்களால் மயக்கிப் பேசி விற்பாள். நறவுக்கள் விற்குமிடத்தைக் குறிக்கும் கொடி பறக்கும் தெருவில் விற்பாள். வாளை மீனுக்கு விலையாக அவள் பழமையான நல்ல நெல்லைப் பெற்றுக்கொள்வதில்லை. கழங்கு போன்று பெரிய முத்துக்களையும், அணிகலன் களையும் பண்டமாற்று விலையாகப் பெறுவாள். இப்படி விற்கும் நாடு எவ்வி அரசன் ஆளும் நாடு. இந்த எவ்வி, அரசன் அன்னி என்பவனுக்கு அறிவுரை கூறினான். அன்னி கேட்க வில்லை. அரசன் திதியன் என்பவனைத் தாக்கினான். போரில் அன்னி மாண்டு போனான். நெஞ்சே! நீ அன்னி போல மாண்டுவோ வாயோ என்னவோ! அவள் (என் காதலி) கிளி போல் மழலை பேசும் சிவந்த வாயைக் கொண்டவள். பெரிய கயல்மீன் போன்ற கண் கொண்டவள். பார்த்தவரை அடிமையாக்கி அமர்த்திக் கொள்ளும் பார்வை கொண்டவள். பின்புறம் தொங்கும் கூந்தலை ஐந்து வகையாகப் பின்னி ஐம்பால் ஒப்பனை செய்து கொண்டி ருப்பவள். மின்னல் போன்று ஒடுங்கிய இடையைக் கொண்டவள். சின்னவள். அவளைப் பின்தொடரும் மட நெஞ்சே! அவளைப் பெறுவாயோ, மாட்டாயோ?
பாடல் 127
பாடியவர் : மாமூலனார்
திணை : பாலை
துறை : பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
"இலங்கு வளை நெகிழச்
சாஅய், அல்கலும்,
கலங்குஅஞர் உழந்து,
நாம் இவண் ஒழிய
வலம் படு முரசிற்
சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு
அறுத்து, இமயத்து
முன்னோர் மருள
வணங்குவில் பொறித்து,
🌻தோழி! நீ இங்கே வளையல்கள் கழன்றோட மேனி அழகு சாய்ந்துகிடக்கிறாய்.
🌻 நாள்தோறும் கலங்கித் துன்பப்படுகிறாய்.
🌻இந்த நிலையில் விட்டுவிட்டு அவர் தங்கமாட்டார்.
🌻வெற்றி முரசு முழக்குபவன் சேரலாதன். 🌻கடலில் கப்பல் ஓட்டிச்சென்று பகைவரின் காவல்மரமான கடம்பு மரத்தை அறுத்து வீழ்த்தினான்.
🌻தன் முன்னோர் மருளும்படி இமயத்தில் தன் வில் சின்னத்தைப் பொறிந்தான்.
🌻 அந்தச் சின்னம் வளைந்த வில்லும் அம்புமாக இருந்தது.
நல் நகர் மரந்தை
முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த
பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை
வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக்
குவைஇ, அன்று அவண்
நிலம் தினத் துறந்த
நிதியத்து அன்ன
ஒரு நாள் ஒரு பகற்
பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி, தோழி!
🌻அப்போது பகைவர்கள் பணிந்து, பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களையும், பொன்னால் செய்த பெண்ணின் சிலையையும், வயிரங் களையும் ஆம்பல் என்னும் எண்ணிக்கை அளவு திறையாக அவனுக்குத் தந்தனர்.
🌻அவற்றைத் தன் மாந்தை நகருக்குக் கொண்டு வந்து ஒரே குவியலாக்கினான்.
🌻அவை பயன்படுத்த முடியாமல் நிலத்தில் மக்கிக் கிடந்தன.
🌻அப்படி அவன் பெற்ற செல்வம் போல ஒருநாள் ஒருபகல் மேலும் தங்கினால் பெறலாம் என்றாலும், அவர் தங்கமாட்டார். 🌻குறித்த காலத்தில் திரும்பிவிடுவார்.
🌻தோழி, நான் சொல்வது உண்மை.
செங் கோற்
கருங் கால் மராத்து
வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை
பொலியச் சூடி,
கல்லா மழவர்
வில் இடம் தழீஇ,
வருநர்ப் பார்க்கும்
வெருவரு கவலை
மொழி பெயர்
தேஎத்தர் ஆயினும்,
பழி தீர் காதலர்
சென்ற நாட்டே."
🌻அவர் சென்றிருக்கும் நாடு வேற்றுமொழி பேசும் மொழிபெயர் தேயம்.
🌻அங்கு வாழும் மக்கள் மழவர்.
🌻கருத்த அடிமரம் கொண்டது மரா மரம்.
🌻இதன் மென்மையான வெண்ணிறப் பூக்களை தன் தலைமுடிச் சிண்டில் அவர்கள் சூடிக் கொண்டிருப்பர்.
🌻வில்லை இடத்தோளில் மாட்டிக் கொண்டு வழிப்போக்கர் வருகைக்காக அவர்கள் காத்திருப்பர்.
🌻அப்படிக் காத்திருக்கும் அச்சம் தரும் பிரிவுப்பாதை (கவலை) கொண்டது காதலர் சென்ற நாடு.
🌻அவர் பழிப்புக்கு இடம் கொடுக்காத உன் காதலர்.
பாடல் 128
பாடியவர் : கபிலர்
திணை : குறிஞ்சி
துறை : இரவுக்குறி வந்த தலைவன், சிறைப்புறத்தானாக தலைவன் தோழிக்குச் சொல்லுவாளாய் சொல்லியது
"மன்று பாடு அவிந்து
மனை மடிந்தன்றே;
கொன்றோரன்ன
கொடுமையோடு இன்றே
யாமம் கொள வரின்
கனைஇக் காமம்
கடலினும் உரைஇ,
கரை பொழியும்மே.
எவன்கொல் வாழி,
தோழி! மயங்கி
இன்னம் ஆகவும்,
நன்னர் நெஞ்சம்
என்னொடும் நின்னொடும்
சூழாது, கைம்மிக்கு,
இறும்பு பட்டு இருளிய
இட்டு அருஞ் சிலம்பில்
குறுஞ் சுனைக் குவளை
வண்டு படச் சூடி,
கான நாடன்
வரூஉம், யானைக்
கயிற்றுப் புறத்தன்ன,
கல்மிசைச் சிறு நெறி,
மாரி வானம் தலைஇ
நீர் வார்பு,
இட்டு அருங் கண்ண
படுகுழி இயவின்,
இருளிடை மிதிப்புழி
நோக்கி, அவர்
தளர்அடி தாங்கிய
சென்றது, இன்றே?"
ஊர் மன்றத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. வீட்டில் உள்ளவர்களை உறங்கிவிட்டனர்.
நள்ளிரவு என்னைக் கொல்வது போலக் கொடுமை செய்துகொண்டு வருகிறது.
கடல் அலை கரையைத் தாக்குவது போலப் பெருகி வரும் காமம் வருகிறது.
தோழி! நான் இப்படிக் கிடக்கும்போது, என் நல்ல நெஞ்சம் என்னையும் உன்னையும் கேட்காமல் அவரிடம் செல்கிறதே, ஏன்?
அடர்ந்த காடு (இறும்பு). மலைக்காடு (சிலம்பு). இருண்ட காடு. இந்தக் காட்டில் கானநாடன் வருகிறான். சுனையில் பூத்திருக்கும் குவளைப் பூக்களைச் சூடிக்கொண்டு வருகிறான். அந்தப் பூக்களில் வண்டுகள் தேனுக்காக மொய்க்கின்றன. யானை முதுகில் கயிறு கிடப்பது போன்ற ஒற்றையடிப் பாதையில் வருகிறான். வானம் பொழிந்து நீர் ஓடுகிறது. நிலத்தில் ஆங்காங்கே ஆழமான குழிகள். பள்ளங்கள். அவற்றில் அவரது காலடி பட்டு விழுந்துவிடுவாரோ என்று நினைத்து, அவரது காலடியைத் தாங்கிப் பிடித்துக்கொள்ள என் நெஞ்சு செல்கிறது. தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
பாடல் 129
பாடியவர் : குட வாயில் கீரத்தனார்
திணை : பாலை
துறை : பிரிவிடை வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.
🌻தன்னுடன் தலைவியை அழைத்துச் செல்லத் தலைவன் ஒப்புக்கொண்டுள்ளான் என்னும் செய்தியைத் தோழி தலைவிக்குத் தெரிவிக்கிறாள்.
"உள்ளல் வேண்டும்
ஒழிந்த பின்'' என
நள்ளென் கங்குல்
நடுங்கு துணை ஆயவர்
நின் மறந்து உறைதல்
யாவது? ''புல் மறைந்து
அலங்கல் வான் கழை
உதிர்நெல் நோக்கி,
கலை பிணை விளிக்கும்
கானத்து ஆங்கண்,
🌻“நான் உயிரோடு இல்லாமல் போய்விட்டால்தானே, நீ ஏதாவது நினைக்கவேண்டும், நான்தான் இருக்கிறேனே” என்று நள்ளிரவில் நடுங்கும்படி கூறியவர் உன்னை மறந்து எப்படி வாழ்வார்?
🌻பெருங்காற்று ஆட்டுவதால் வானளாவிய மூங்கிலி லிருந்து உதிர்ந்த நெல்லைப் பார்த்த ஆண்மான் தன் பெண்மானை உண்ண அழைக்கும் கானம் அது.
கல் சேர்பு இருந்த
கதுவாய்க் குரம்பைத்
தாழிமுதற் கலித்த
கோழிலைப் பருத்திப்
பொதி வயிற்று இளங் காய்
பேடை ஊட்டி,
போகில் பிளந்திட்ட
பொங்கல் வெண் காழ்
நல்கூர் பெண்டிர்
அல்கற் கூட்டும்
கலங்குமுனைச் சீறூர்
கை தலைவைப்ப,
கொழுப்பா தின்ற
கூர்ம் படை மழவர்,
செருப்புடை அடியர்,
தெண் சுனை மண்டும்
🌻அங்குக் கல்லுப் பாறையின் ஓரமாக இருந்தது ஒரு கூரைக் குடிசை.
🌻அதில் வாழும் பெண் பானையில் வைத்துத் தான் வளர்த்த கொழுத்த இலை கொண்ட பருத்திச் செடியின் வயிறு தள்ளிய இளங்காயை தன் வளர்ப்பு மானுக்கு ஊட்டுவாள்.
🌻நெற்றாகி (போகில்) வெடித்த வெள்ளைப் பஞ்சைப் பறித்துத் தன் மடியில் சேகரிப்பாள்.
🌻 இப்படிப்பட்ட சிற்றூர் மக்கள் மழவர்.
🌻பிறர் தலையில் கைவைக்கும்படி அவர்கள் போரிடுவர். கொழுப்பை உண்பர். 🌻காலில் செருப்பு அணிந்திருப்பர்.
🌻சுனையில் நீராடுவர்.
அருஞ் சுரம் அரிய
அல்ல; வார் கோல்
திருந்து இழைப் பணைத் தோள்,
தேன் நாறு கதுப்பின்,
குவளை உண்கண்,
இவளொடு செலற்கு'' என
நெஞ்சு வாய் அவிழ்ந்தனர்
காதலர்
அம் சில் ஓதி
ஆயிழை! நமக்கே.
🌻“இவர்கள் வாழும் சுரத்தில் இவளை அழைத்துக்கொண்டு கடந்து செல்லுதல் எனக்கு அரிய செயல் அன்று” என்று தன் உள்ளக் கிடக்கையை வாயால் அவர் தெரிவிக்கிறார்.
🌻தலைவி – அழகிய சிலவாகிய நீண்ட அழகான கூந்தலை உடையவள்.
🌻தேன் மணக்கும் கூந்தலை உடையவள். 🌻தோள் நிறைய அணிகலன்களைப் பூண்டவள்.
🌻குவளைமலர் போன்ற கண்ணை உடையவள்.
பாடல் 130
பாடியவர் : வெண் கண்ணனார்
திணை : நெய்தல்
துறை : தலைவன் பாங்கற்கு கழல் மறுத்து உரைத்தது
"அம்ம வாழி, கேளிர்!
முன் நின்று
கண்டனிர் ஆயின்,
கழறலிர் மன்னோ
நுண் தாது பொதிந்த
செங் காற் கொழு முகை
முண்டகம் கெழீஇய
மோட்டு மணல் அடைகரை,
பேஎய்த் தலைய
பிணர் அரைத் தாழை
எயிறுடை நெடுந் தோடு
காப்ப, பல உடன்
வயிறுடைப் போது
வாலிதின் விரீஇ,
புலவுப் பொருது அழித்த
பூ நாறு பரப்பின்
இவர் திரை தந்த
ஈர்ங் கதிர் முத்தம்
கவர் நடைப் புரவி
கால் வடுத் தபுக்கும்
நல் தேர் வழுதி
கொற்கை முன் துறை
வண்டு வாய் திறந்த
வாங்குகழி நெய்தற்
போது புறங்கொடுத்த
உண்கண்
மாதர் வாள் முகம்
மதைஇய நோக்கே.
தலைவன் பாங்கனிடம் (தோழன்) கூறுகிறான்.என் உடனுறை நண்ப! நான் சொல்வத்தைக் கேள். அவள் பார்த்த பார்வையை நீ நேரில் கண்டிருந்தால் என் காதல் துடிப்பைக் கேவலப்படுத்தி இடித்துரைக்க மாட்டாய். முண்டகப் பூ கொட்டிக்கிடக்கும் மணல் பரப்பு அது. அங்கே தாழம்பூ உப்பங்கழியின் நாற்றத்தைப் போக்கிக்கொண்டிருக்கும்.
முண்டகம் – சிவந்த காம்பினைக் கொண்டது. மகரந்தத் தாதுகள் நிறைந்தது.
தாழம்பூ – தாழைமரம் பேய்ப்போல் தலையைக் கொண்டிருக்கும். தாழைமடல் தோடுகள் முட்களைக் கொண்டிருக்கும். இந்தத் தோடுகள் தாழம்பூவைக் காப்பாற்றும். தாழம்பூ மொட்டு உப்பிய வயிற்றினைக் கொண்டிருக்கும்.
அந்த மணல் பரப்பில் கடலலை முத்துக்களைக் கொண்டுவந்து சேர்க்கும்.
அந்த முத்துக்கள் தாவி நடக்கும் குதிரையின் காலில் வடுப் படும்படி தடுக்கும். இது கொற்கைத் துறை.
இது வழுதியின் ஆட்சிக்கு உட்பட்டது.
இந்தக் கொற்கைத் துறையில் நெய்தல் பூத்திருக்கும். அந்தப் பூவின் வாயை வண்டு திறக்கும். வண்டு திறக்கும் அந்த நெய்தல் போதைத் தோற்றோடச் செய்யும் அழகு கொண்டது அவள் கண்.
அந்தக் கண் இருக்கும் முகம் காதல் ஒளிரும் முகம். அதன் கண் பார்வையில் ஒரு மதமதப்பு. அந்தக் காதல் மதமதப்புப் பார்வையை நீ நேரில் கண்டிருந்தால் என்னை இடித்துரைக்க மாட்டாய்.
பாடல் 131
பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்
திணை : பாலை
துறை : தலைவன் நெஞ்சிற்கு சொல்லியது
🌻நெஞ்சே! இவளைக் காட்டிலும் ஈகை சிறந்ததாகையால் பொருள் தேடிக் கொண்டுவரச் செல்லலாம் என நினைப்பாயாயின், உன் செயல் சிறக்கட்டும். நான் வரமாட்டேன்.
🌻தலைவன் சொல்கிறான்.
"விசும்பு உற நிவந்த
மாத் தாள் இகணைப்
பசுங் கேழ் மெல் இலை
அருகு நெறித்தன்ன,
வண்டு படுபு இருளிய,
தாழ் இருங் கூந்தல்
சுரும்பு உண விரிந்த
பெருந் தண் கோதை
🌻இகணை இலை அருகருகு நெருக்கி வைத்தது போன்ற கூந்தலை உடையவள் என் கோதை.
🌻 இவள் இன்பத்தைக் காட்டிலும் ஈகை நமக்குச் சிறந்தது.
🌻இகணை – வானளாவ உயர்ந்திருக்கும். மரம் பருத்திருக்கும்.
🌻பசுமையான மெல்லிய இலைகளைக் கொண்டிருக்கும்.
🌻கூந்தல் = தாழ்ந்து கருகருவென இருண்டிருக்கும்.
🌻 வண்டுகள் மொய்க்கும். சூடியிருக்கும் பூவின் தேனைச் சுரும்பு உன்னும்.
இவளினும் சிறந்தன்று,
ஈதல் நமக்கு'' என
வீளை அம்பின்
விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த
நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த
சேண் படர் கன்றின்
கடைமணி உகுநீர்
துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி,
🌻நடுகல் கோயிலில் வேலும் பலகையும் (கேடயம்) நடப்பட்டிருக்கும்.
🌻 அதன் வழியே செல்பவர்களுக்கு பகையாளிகள் போரிட வருவது போல இருக்கும்.
🌻நடுகல் – பாதைப் பக்கத்தில் இருக்கும்.
அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு
நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை
வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந
கானம், ''நம்மொடு
வருக'' என்னுதி
ஆயின்,
வாரேன்; நெஞ்சம்!
வாய்க்க நின் வினையே."
🌻மயில் பீலி சூட்டப்பட்டிருக்கும்.
🌻 கல்லுருவ வீரனின் பெயரும், பெருமையும் எழுதப்பட்டிருக்கும்.
🌻மழவர் பசுவினத்தைக் கவர்ந்து செல்லும்போது நடக்க முடியாமல் நின்று வழியில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் கன்றுக்காக மழவர்களுடன் போரிட்டு மாண்டவனுக்காக நடப்பட்ட கல் நடுகல்.
🌻மழவர் – வாயில் வீளை (விசில்) அடிப்பது போல அம்பு எய்ய வல்லவர்கள்.
🌻ஆனிரைகளைக் கவர்ந்து செல்லும் பழக்கம் உடையவர்கள்.
🌻இப்படிப்பட்ட பாதை வழியே செல்லலாம் என நினைப்பாயாயின் உன் செயல் சிறக்கட்டும். நான் வரமாட்டேன்.
பாடல் 132
பாடியவர் : தாயங் கண்ணனார்
திணை : குறிஞ்சி
துறை : தோழி தலைவனை வரைவு கடாயது
"ஏனலும் இறங்கு குரல்
இறுத்தன; நோய் மலிந்து,
ஆய்கவின் தொலைந்த,
இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும், இவ்
ஊரும்; ஆகலின்,
களிற்று முகம் திறந்த
கவுளுடைப் பகழி,
வால் நிணப் புகவின்,
கானவர் தங்கை
அம் பணை மென் தோள்
ஆய் இதழ் மழைக் கண்
ஒல்கு இயற் கொடிச்சியை
நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ
நுண் பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய
சாரல் நளி சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த
குறுஞ் சிறைப் பறவை
வேங்கை விரி இணர்
ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத்
துஞ்சி, யானை
இருங் கவுட்
கடாஅம் கனவும்,
பெருங் கல் வேலி,
நும் உறைவு இன் ஊர்க்கே.
இவளுக்கு உதவ விரும்பினால், திருமணம் செய்துகொண்டு உன் ஊருக்கு அழைத்துச் செல் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். இவள் கொடிச்சி. தளரும் கொடி போன்றவள். அழகிய மூங்கில் போன்ற தோளை உடையவள். பூவின் இதழ் போல ஈரமான கண்களை உடையவள். காட்டில் வாழும் கானவர் மக்களின் தங்கை.
கானவர் – களிற்றின் முகத்தில் அம்பு எய்வர். அது வீழ்ந்ததும் அதன் காதை அறுத்து உணவாக்கிக் கொள்வர்.
தினை கொய்தாயிற்று. தினைக் காவலுக்கு இவள் வராததால் உன்னைப் பெற முடியவில்லை. ஏக்க நோயால் வருந்து கிறாள். நெற்றியில் தன் அழகை இழந்து விட்டாள். அதனைப் பார்த்து ஊர் ஏதேதோ பேசுகிறது. ஆகவே கொடிச்சியை உன்னுடன் கூட்டிச் செல்க. பூண் அணிந்த மார்பை உடையவனே! உன் ஊருக்குக் கூட்டிச் செல்க. உன் ஊர் – மழை பொழியும் மலைச்சாரல். அங்கே குளுமையான நீர்ச் சுனை. தேன் உன்னும் சிறிய சிறகினை உடைய பறவை சுனையிலுள்ள மொட்டுகளின் வாயைத் திறக்கும். பின்னர் வேங்கை மரத்தில் உள்ள மலரில் அமர்ந்து ஊதும் (ஒலிக்கும்). பின் காந்தள் மலருக்கு வந்து உறங்கும். உறங்கிக்கொண்டே யானையின் மதநீரை மொய்க்கக் கனவு காணும். இப்படிப்பட்ட மலைநாட்டில் உன் ஊர் உள்ளது. அந்த ஊருக்கு இவளைக் கொண்டுசெல்க.
பாடல் 133
பாடியவர் : தாமோதரனார்
திணை : பாலை
துறை : பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குத் தலைவி சொல்லியது
"குன்றி அன்ன கண்ண,
குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி
மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில்
சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ
நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த
பைம் புதற் புறவின், வில் எறி
🌻நயமாக அவர் ஏமாற்றுகிறார்.
🌻வெள்ளெலி குன்றிமணி போன்ற கண்களையும், குறுகுறுத்த மயிர்களையும், சிறிய கால்களையும், துருத்திக்கொண்டிருக்கும் மோவாயையும் கொண்டது.
🌻அது செம்மண் நிலத்தைப் பறித்த புழுதியில் நாள்தோறும் பூக்கும் வேங்கைப் பூக்கள் நல்லழகுடன் (நன்கனம்) கொட்டிக் கிடக்கும்.
🌻கார் காலத்தில் இப்படித் தோன்றும் முல்லை நிலம் அது.
பஞ்சியின் வெண்
மழை தவழும்
கொல்லை இதைய
குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன
காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன
இலமலர் விரைஇ,
பூங் கலுழ் சுமந்த
தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல்
வளி தர உண்கும்;
எம்மொடு வருதல்
வல்லையோ மற்று?'' எனக்
கொன் ஒன்று வினவினர்
மன்னே தோழி!
🌻வில்லால் அடித்த பஞ்சு போல் தோன்றும் வெண்ணிற மேகங்கள் தவழும் குறும்பாறைகள் நிறைந்த கொல்லைக் காட்டுப் பகுதி அது.
🌻காயாம் பூ
அங்கு, மேயும் யானைக் கூட்டம் போல் காயாம் பூக்கள் கொட்டிக் கிடக்கும்.
🌻எரியும் தீயைப் போல் இலவம் பூக்கள் அதனோடு சேர்ந்து கிடக்கும்.
🌻 பூக்கள் கலங்கிய காட்டாற்று ஊற்று வானம் தரும் தூவல் நீரோடு சேர்ந்து வரும். 🌻அதனை உண்ணலாம். வர உன்னால் இயலுமா, என்று சும்மா (கொன்) பேச்சுக்காக அவர் என்னைக் கேட்டார்.
🌻தோழி!, உண்மை அது அன்று.
இதல் முள் ஒப்பின்
முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு
கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து
ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும்
மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய
காடு இறந்தோரே."
🌻காடைப் பறவையின் சிறகு முள் போல மொட்டு முதிர்ந்த வெட்சிப் பூக்களும், கொல்லையில் பூக்கும் குருந்தம் பூக்களும் கல்லுப் பாறையில் கொட்டிக் கிடக்கும் மிளைக் காடு (பாலைநிலக் காடு) அது.
🌻அங்கே நீர் ஓடாது.
🌻 நீர் போல் தோன்றும் மரல்-நீர் மேட்டு நிலத்தில் ஓடும்.
🌻 அதனைப் பருகுவதற்காக ஓடும் பெண்மானைப் பின்தொடர்ந்து ஆண்மான் ஓடும்.
🌻இத்தகைய காட்டுவழியில்தான் அவர் செல்கிறாள்.
🌻தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
பாடல் 134
பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்
திணை : முல்லை
துறை : வினைமுற்றி மீண்ட தலைவன் பாகனிடம் உரைத்தது
"வானம் வாய்ப்பக்
கவினி, கானம்
கமஞ் சூல் மா மழை
கார் பயந்து இறுத்தென,
மணி மருள் பூவை
அணி மலர் இடைஇடை,
செம் புற மூதாய்
பரத்தலின், நன் பல
முல்லை வீ கழல்
தாஅய், வல்லோன்
செய்கை அன்ன
செந் நிலப் புறவின்;
வாஅப் பாணி வயங்கு
தொழிற் கலிமாத்
தாஅத் தாள் இணை
மெல்ல ஒதுங்க,
இடி மறந்து, ஏமதி
வலவ! குவிமுகை
வாழை வான் பூ
ஊழுறுபு உதிர்ந்த
ஒழிகுலை அன்ன
திரிமருப்பு ஏற்றொடு
கணைக் கால் அம் பிணைக்
காமர் புணர் நிலை
கடுமான் தேர்
ஒலி கேட்பின்,
நடுநாட் கூட்டம்
ஆகலும் உண்டே."
தலைவனின் அருள் நெஞ்சம். வானம் வாய்த்தது. மழை மேகம் கார் கால மழை பொழிந்தது. நீலமணி நிறத்தில் காயாம் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றிற்கு இடையே செந்நிற மூதாய்ப் பூச்சிகள் மேய்கின்றன. வெள்ளை நிற முல்லைப் பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. முல்லை நிலமே ஓவியன் தீட்டிய வண்ண ஓவியம் போலத் தோன்றுகிறது. வலவ! (தேரோட்டியே) இசைப் பாணி போன்று ஒலிக்கும்படி துள்ளித் தாவும் குதிரைகளைத் தேரில் பூட்டியுள்ளாய். அவற்றை இடித்து ஓட்டாதே. உதிர்ந்து கிடக்கும் வாழைப் பூ போன்ற கொம்புகளை உடைய இரலை ஆண்மான் பருத்த கால்களை உடைய பெண்மானைப் புணர்ந்துகொண்டிருக்கும்போது தேரின் ஒலி கேட்டால் இடையூறு நேருமல்லவா?
பாடல் 135
பாடியவர் : பரணர்
திணை : பாலை
துறை : பிரிவின்கண் வேறுபட்ட தலைவன் குறித்து தலைவி தோழிக்குச் சொல்லியது
"திதலை மாமை
தளிர் வனப்பு அழுங்க,
புதல் இவர் பீரின்
எதிர் மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த
நுதலேன் ஆகி,
எழுது எழில் மழைக் கண்
கலுழ, நோய் கூர்ந்து,
ஆதிமந்தியின் அறிவு
பிறிது ஆகி,
பேதுற்றிசினே காதல்
அம் தோழி!
🌻ஆதிமந்தி போல …என் மேனி தளிர் போல் வனப்புக் கொண்டது.
🌻புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டது.
🌻 அந்த அழகு கெடும்படி நெற்றியில் பசப்பு பாய்ந்துள்ளது.
🌻பீர்க்கம் பூ போல மஞ்சள் நிறப் பசப்பு பாய்ந்துள்ளது.
🌻அதனால் மை எழுதிய என் கண் அழுகிறது.
🌻(அட்டன் அத்தி கழார் ஊரில் காவிரியாற்றுத் துறையில் வேந்தன் கரிகாலன் மேற்பார்வையில் நீச்சல் நடனம் ஆடிக் காட்டினான். அவனுடன் காவிரி என்னும் பெண்ணும் சேர்ந்து ஆடினாள். நீரோட்டத்தில் அத்தியும் காவிரியும் அடித்துச் செல்லப்பட்டனர். கரிகாலன் மகள் ஆதிமந்தி ஆட்டனத்தியின் காதலி. காதலனைக் காணாத காதலி ஆதிமந்தி பித்துப் பிடித்தவள் போலப் பிதற்றிக்கொண்டு காவிரிக்கரை ஓரமாகவே தேடிக்கொண்டு சென்றாள்.)
🌻ஆதிமந்தி போல என் அறிவு மழுங்கிவிட்டது.
🌻பித்துப் பிடித்துக் கிடக்கிறேன்.
🌻 என்மீது காதல் கொண்டுள்ள தோழி! இதனைக் கேள்.
காய்கதிர் திருகலின்
கனைந்து கால் கடுகி,
ஆடுதளிர் இருப்பைக்
கூடு குவி வான் பூ,
கோடு கடை கழங்கின்,
அறைமிசைத் தாஅம்
காடு இறந்தனரே,
காதலர்; அடுபோர்,
வீயா விழுப் புகழ்,
விண் தோய் வியன் குடை,
ஈர் எழு வேளிர் இயைந்து
ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர்
போலக்
கலங்கின்று மாது, அவர்த்
தெளிந்த என் நெஞ்சே."
🌻காயும் வெயில் கசக்கிப் பிழிவதாலும், கடுமையான காற்று வீசுவதாலும் ஆடும் தளிரோடு கூடிய இரும்பைக் காய் வளைவாகக் கடைந்தெடுக்கப்பட்ட கழங்குக் காய்களை நிலத்தில் விசிறிப் பரப்புவது போல பாறைமீது விழுந்து தெரிக்கும்.
🌻இப்படி இரும்பைப் பூ தெரிக்கும் காட்டு வழியில் காதலர் சென்றுள்ளார்.
🌻 வேளிர் குடி அரசர்கள் 14 பேர் ஒன்று சேர்ந்து, கழுவுள் அரசனின் காமூர் நகரைத் தாக்கினர்.
🌻 கழுவுள் சாயாத சிறந்த புகழையும், வானளாவும் வெண்கொற்றக் குடையும் கொண்டவன்.
🌻போரில் காமூர் கலங்கியது போல, அவரை நம்பிய என் நெஞ்சம் கலங்குகிறது. 🌻தலைவி தன் தோழியிடம் சொல்லிக் கலங்குகிறாள்.